தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் சுமார் 1200-க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். சில நாட்களுக்கு முன்பு படம் தயாரிப்பவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து புதிய சங்கம் ஒன்றை உருவாக்கினார்கள்.

இந்த தயாரிப்பாளர் சங்கத்துக்கு தலைவராக பாரதிராஜா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்துக்குத் தேர்தல் நடத்தியே நிர்வாகிகளைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதில் பாரதிராஜா உறுதியாக இருந்தார். அந்த தேர்தலுக்கு கே.விஜயகுமார் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

நேற்று (ஆகஸ்ட் 28) சங்க உறுப்பினர்கள் கூடினார்கள்.

தலைவராக பாரதிராஜா, செயலாளராக டி.சிவா, இணைச் செயலாளர்களாக டி.தனஞ்ஜெயன் மற்றும் எஸ்.ஆர்பிரபு, பொருளாளராக தியாகராஜன், துணைத் துணை செயலாளராக லலித்குமார் மற்றும் சுரேஷ் காமாட்சி ஆகியோர் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

எதிர்த்து வேறு யாரும் போட்டியிடாததால் இவர்கள் அனைவருமே போட்டியின்றி தேர்வானார்கள்.

அதனைத் தொடர்ந்து நந்தகோபால், மதன், சி.வி.குமார், ராஜ்சேகர கற்பூரசுந்தரபாண்டியன், டில்லி பாபு, கார்த்திகேயன் சந்தானம், ஆர்.கண்ணன், சுதன் சுதர்சன், விஜய் ராகவேந்திரா, ஐ.பி.கார்த்திகேயன், நிதின் சத்யா மற்றும் பி.ஜி.முத்தையா ஆகிய 12 செயற்குழு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வானார்கள்.

ஜூம் செயலி வழியே அனைத்து நிர்வாகிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, தேர்தல் அதிகாரி விஜயகுமார் நிர்வாகிகள் பட்டியலை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இவர்களுடைய நிர்வாகம் 2022-ம் ஆண்டு வரை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.