டில்லி

ம் ஆத்மி கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தரம்வீர் காந்தி காங்கிரஸில் இணைந்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. பல கட்சி உறுப்பினர்கள் கட்சி விட்டு கட்சி மாறியும், தங்களது பதவியை ராஜினாமா செய்வதுமான நிகழ்வுகளும் அரங்கேறி வருகின்றன.

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவை சேர்ந்த ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர். தரம்வீர் காந்தி இன்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் முன்னிலையில் இணைந்தார். தரம்வீர் காந்தியை காங்கிரஸ் கட்சி தலைவர்களான பவன் கேரா மற்றும் பஞ்சாப் மாநில பொறுப்பாளர் தேவேந்திர யாதவ், பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் அமரீந்தர் சிங் ராஜா வார்ரிங் மற்றும் சி.எல்.பி. தலைவர் பிரதாப் சிங் பஜ்வா ஆகியோர் வரவேற்றனர்.

கடந்த 2014 ஆம் ஆண்டு தரம்வீர் காந்தி மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளராகப் பாட்டியாலா தொகுதியில் இருந்து பிரனீத் கவுரை தோற்கடித்து வெற்றி பெற்றார். பிறகு 2016 ஆம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி நவன் பஞ்சாப் கட்சி என்ற தனக்கென சொந்த கட்சியை உருவாக்கினார், இன்று அந்தக் கட்சியையும் காங்கிரசுடன் இணைத்துள்ளார்.

மருத்துவரான தரம்வீர் காந்தி பாட்டியாலா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.