டெல்லி: தலைநகர் டெல்லி  மெட்ரோ வாகன நிறுத்துமிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், 10 கார்கள் மற்றும் 80க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிந்து நாசமானதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தீ  விபத்தில் 10 கார்கள், 3 இரு சக்கர வாகனங்கள், 80 இ-ரிக்ஷாக்கள் எரிந்து சாம்பலானதாக தீயணைப்பு துறை தெரிவித்து உள்ளது.டெல்லியில் ஜாமியா நகரில்  உள்ள மெட்ரோ ரயில் வாகன நிறுத்துமிடத்தில் இன்று காலை திடீரென விபத்து ஏற்பட்ட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு வருகை தந்தனர். அதற்குள் தீ மளமளவென கொழுந்துவிட்டு எரியத்தொடங்கியது. 7 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீ விபத்தில்   அதிஷ்டவசமாக எந்த ஒரு உயிரிழப்புகளும் ஏற்படவில்லை.  ஆனால், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 கார்கள், 3 இரு சக்கர வாகனங்கள், 30 புதிய இ-ரிக்ஷாக்கள், 50 பழைய இ-ரிக்ஷாக்கள் முழுவதும் எரிந்து நாசமாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தீ விபத்து ஏற்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறிப்படவில்லை என்று தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.