சென்னை: அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இதனால் தமிழ்நாடு புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது,  அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற வாய்ப்புள்ளது. 21ம் தேதியில் மத்திய அரபிக் கடல் பகுதியில் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

மத்திய அரபிக் கடல் பகுதியில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி  21ம் தேதியில்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும், இதன் காரணமாக, நாளை முதல் 23ஆம் தேதி வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும்,  தென்தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

கேரளாவில் கடந்த சில தினங்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.  இந்த நிலையில், அரபிக்கடலில் உருவாகும் இந்த காற்றுழுத்த தாழ்வு பகுதியால் கேரளாவில் நல்ல மழைப்பொழிவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சில இடங்களில் வெள்ளப் பெருக்கும், நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு இருந்த நிலையில், இன்று வரை கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

கேரளாவில் புரட்டி எடுக்கும் கனமழையால் தலைநகர் திருவனந்தபுரம் அதிக அளவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள கழகூடம் உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ளதால், அப்பகுதி மக்கள் அங்கிருந்து மிதவை படகு மூலம் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.