கர்நாடக சட்டமன்ற தேர்தலில் இறுமதத்தினரிடையே மோதலை உருவாக்கும் விதமாக திப்பு சுல்தான் மரணம் குறித்து 2022 ம் ஆண்டு நவம்பர் மாதம் நாடகம் ஒன்று அரங்கேறியது.

இந்த நாடகத்தை அதன்ட கரியப்பா எழுதி இயக்கி இருந்தார், “திப்பு சுல்தானின் உண்மை கனவு” (Tipu Nija Kanasugalu – Tipu’s Real Dreams), என்ற பெயரில் வெளியான இந்த நாடகம் பின்னர் புத்தகமாகவும் வெளியானது.

அதன்ட கரியப்பா

குடகு பகுதியைச் சேர்ந்த 80000 போர்வீரர்களை திப்பு சுல்தான் கொலை செய்ததாகவும் திப்பு சுல்தானை கொன்றது பிரிட்டிஷ் படையினர் இல்லையென்றும் வொக்கலிகா இனத் தலைவர்களாக அப்பகுதியில் வலம்வந்த உரி கவுடா மற்றும் நஞ்சே கவுடா சகோதரர்கள் தான் திப்பு சுல்தானை கொன்றவர்கள் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தேர்தலையொட்டி வொக்கலிகா சமூத்தைச் சேர்ந்தவர்கள் இடையே அந்த இனத் தலைவர்களாக வழிபடப்படும் உரி கவுடா மற்றும் நஞ்சே கவுடா தான் திப்பு சுல்தானை கொன்றது என்று வெளியான இந்த நாடகம் எதிர்பார்த்த பலனை தரவில்லை என்றாலும் மக்களிடையே சென்று சேர்ந்தது.

இதனையடுத்து பாஜக-வைச் சேர்ந்த தேசிய பொதுச்செயலாளரும் தமிழக பொறுப்பாளருமான சி.டி. ரவி மற்றும் சி.என் அஸ்வத் நாராயண் ஆகியோர் தான் உரி கவுடா மற்றும் நஞ்சே கவுடா சகோதரர்களின் மறுஉருவாக இப்போது பிறந்திருக்கிறார்கள் என்று பரப்பப்பட்டது.

இதற்கு வரலாற்று ஆய்வாளர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு கட்டமாக மைசூரு எக்ஸ்பிரஸ் சாலையை திறந்துவைக்க பிரதமர் மோடி வந்தபோது உரி கவுடா மற்றும் நஞ்சே கவுடா உருவத்துடன் கூடிய கட்டவுட்டுகள் மாநாட்டு நுழைவாயிலில் வைக்கப்பட்டது.

இந்த கட்டவுட்டுக்கு எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து அப்போதே அது அகற்றப்பட்டது.

இந்த நிலையில் தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்ததோடு மட்டுமல்லாமல் நான்கு முறை எம்.எல்.ஏ.-வாக தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதியில் சி.டி. ரவி-யும் படுதோல்வி அடைந்தார்.

பாஜக-வின் வெற்றிக்காக புனையப்பட்ட கதை கர்நாடக மக்களிடம் எடுபடாமல் போன நிலையில் வரலாற்று ஆய்வாளர்களின் தொடர் குற்றச்சாட்டை அடுத்து இந்த நாடகத்தை எழுதி இயக்கிய அதன்ட கரியப்பா மைசூரை மையமாகக் கொண்டு இயங்கி வரும் ரங்கையானா நாடக பயிற்சி மையத்தின் இயக்குனர் பொறுப்பில் இருந்து ஞாயிறன்று பதவி விலகி இருக்கிறார்.