டெல்லி:  வெறுப்புணர்வை தூண்டியதாக வழக்கின் விசாரணைக்கு தடை கேட்டு தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சார்பில்  உச்ச நீதிமன்றத்தில் அண்ணாமலை மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது, பட்டாசு வெடிக்கக் கூடாது என்று கிறிஸ்தவ அமைப்புதான் முதலில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாக அண்ணாமலை பேட்டி யுடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்திருந்தார். இதையடுத்து இரு மதத்தவர்களுக்கு இடையே வெறுப்புணர்வை தூண்டு வதாக அண்ணாமலை மீது சேலத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ் சேலம் நீதிமன்றத்தில் அண்ணாமலைக்கு எதிராக மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான விசாரணைக்கு நேரில் ஆஜராக அண்ணாமலைக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது. இந்த நீதிமன்ற அழைப்பாணைக்கு எதிராகவும், தனது மீதான புகார் மனுவை ரத்து செய்ய வேண்டும் என அண்ணாமலை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அண்ணாமலை மீதான புகார் மனுவை ரத்து செய்ய மறுத்து, மனு மீதான வழக்கை சட்டத்திற்குட்பட்டு சேலம் நீதிமன்றம் விசாரிக்கலாம் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். அந்த மேல்முறையீடு மனுவில், தனக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.