சென்னை:
கொரோனா ஊரடங்கால், கோவில்களில் திருவிழாக்கள் நடத்த விதிக்கப்பட்டுள்ள தடைகளை கட்டுப்பாடுகளைக் கொண்ட தளர்வுகளுடன் தமிழக அறநிலையத்துறை நீக்கி அறிவித்து உள்ளது. அதன்படி பக்தர்கள் இல்லாமல் திருவிழாக்களை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் 25 முதல் கோயில்கள் மூடப்பட்டன. இதன் காரணமாக எந்த வித திருவிழாக்களும் நடத்த விதிக்கப்பட்டது. மேலும் பக்தர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது.
இதற்கிடையில் ஊரடங்கில் கொடுக்கப்பட்ட சில தளர்வுகள் காரணமாக, ஜூலை 1ம் தேதி முதல் கிராமப்புறங்களில் சிறிய கோயில்கள் திறக்கப்பட்டு உள்ளன. இப்போது ஆடி மாதம் பிறந்துள்ள தால் கோயில்களில் திருவிழாக்களை நடத்த அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக, இந்து அறநிலையத்துறை ஆணையர் க.பணீந்திர ரெட்டி சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது,
தமிழகத்தில் அறநிலையத்துறை கட்டுப் பாட்டில் உள்ள பட்டியல் சார்ந்த மற்றும் பட்டியல் சாராத கோயில்களில் பூஜைகள், திருவிழாக்கள் நடப்பது இன்றியமையாத ஒன்றாக இருந்து வருகிறது. கொரோனா பரவல் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி கோயில்களில் அரசு வழிகாட்டுதலின்படி பக்தர்கள் தரிசனத்துக்கு இதுவரை அனுமதிக்கப்படவில்லை. ஆனாலும் கோவில்களில் தினசரி பூஜைகளை மட்டும் அர்ச்சகர், பட்டர், பூசாரிகள் மூலம் தங்கு தடையின்றி நடைப்பெற்று வருகிறது.
அரசு தற்போது வழங்கி உள்ள அறிவுரைகளின்படி கிராம பகுதிகளில் உள்ள கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அரசின் வழிகாட்டு நெறிமுறைகள், பாதுகாப்பு முறைகளை கடைபிடித்து பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், கோயில்களில் நடக்க வேண்டிய திரு விழாக்களுக்கு அனுமதி கோரியும், திருவிழா நிகழ்வுகளை எல்லாம் யூ-டியூப் சேனல் மூலமாக பதிவேற்றம் செய்ய அனுமதி வேண்டி சார்நிலை அலுவலர்களிடம் இருந்து கோரிக்கைகள் வருகின்றன.
கோயில்களில் வழக்கமாக நடக்கும் திருவிழாக்களுக்கு தலைமையிட அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை. திருவிழாக்கள் தொன்று தொட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகின்ற ஒரு பழக்கம், மேலும் அந்த வழக்கங்கள்படி கோயில் வளாகத்துக்குள் நடக்க வேண்டும்.
சொற்ப அளவிலான கோயில் பணியாளர்களைக் கொண்டு முகக்கவசம் அணிந்து, 6 அடி சமூக இடை வெளி கடைபிடித்து திருவிழாக்கள் நடக்க வேண்டும்.
விழாக்களில் உபயதாரர்கள், பக்தர்கள் கலந்துகொள்ள கண்டிப்பாக அனுமதி கிடையாது.
திருவிழாக்கள் தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற வேண்டியிருப்பின் அந்த அனுமதியை பெற்று திருவிழாக்கள் நடத்த வேண்டும்.
விழாக்களை பக்தர்கள் தங்கள் வீடுகளில் இருந்து பார்க்கும் கையில் வலைதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Patrikai.com official YouTube Channel