சென்னை: தமிழக நலன் கருதி டெல்லி ஜமாத் மாநாட்டை  மதப்பிரச்னையாக்க வேண்டாம் என்று தமிழக பாஜக தலைவர் முருகன் அறிக்கை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறி இருப்பதாவது: இந்தியாவில் கொரோனாவின் பரவலைத் தடுத்திட மத்திய மாநில அரசுகள் ஊரடங்கு உட்பட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

பிரதமர் மோடி மக்களுக்கு நம்பிக்கை அளித்து, கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும் தொடர்ந்து பேசிவருகிறார். தமிழக அரசு துரித கதியில் இயங்கி வருகிறது. இந்தியாவுக்கும் கொரோனாவுக்கும் இடையே ஒரு பெரிய போர் நடந்து வருவதைப்போல நாடே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

கொரோனாவை வீழ்த்திட முதல் நடவடிக்கை அவரவர் வீடுகளில் தனித்திருத்தல் தான். இதை நாம் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். இந் நிலையில் தில்லி நிஜாமுதீனில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் மாநாட்டிற்கு தமிழகத்திலிருந்து சென்றிருந்த சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் தமிழகம் திரும்பி இருப்பதாக தெரியவருகிறது.

மாநாட்டில் கலந்து கொண்ட பல வெளிநாட்டினரும் அந்தந்த நாடுகளுக்கு திரும்பாமல் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் உள்ள நகரங்களுக்குச் சென்றிருப்பதும் தெரிய வந்திருக்கிறது. மாநாட்டின் போதும் பயணத்தின் போதும் ஏற்பட்ட தொடர் நிகழ்வுகளால் சம்பந்தப்பட்ட பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் அந்தந்த மாவட்ட நிர்வாகத்தினரால் சிலரை தொடர்பு கொள்ள முடிந்தது என்றும் சிலரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் தகவல் வெளியானதால், தொடர்பு கொள்ள முடியாதவர்கள் தாங்களாகவே முன்வந்து தகவல் தெரிவிக்க வேண்டும் என தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் நேற்றைய தினம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழக அரசின் இந்த வேண்டுகோளை தொடர்ந்து தமிழக மக்களின் நலன் கருதி இந்த மாநாட்டுக்குச் சென்று வந்தவர்கள், அவர்தம் குடும்பத்தினர் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்கள் தாங்களாகவே முன்வந்து அரசு மருத்துவமனைகளில் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

இதை யாரும் அலட்சியமாக எடுத்துக்கொள்ள வேண்டாம். கொரோனாவுக்கு எதிரான மாநில அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அனைவரையும் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.

அதில் அரசியல் மத பிரச்சினைகளை யாரும் உட்படுத்த வேண்டாம். பிரச்சினையின் ஆழத்தை உணர்ந்து இஸ்லாமிய அறிஞர்கள் அரசின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு நல்குவார்கள் என்று நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.