சென்னை:

ரூ.1000 கோடியில் தடுப்பணைகள் கட்டப்படுவது மற்றும்   குடிமராமத்து பணிகள் குறித்து அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமைச் செயலகத்தில் இன்று ஆலோசனை நடத்தினார்.

ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை பொதுப்பணித் துறை அதிகாரிகளுடைய ஆய்வுக் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அதன் அடிப்படையில், பொதுப்பணித் துறை சார்பாக நடைபெற்றுக் கொண்டு இருக்கின்ற பணிகள் குறித்து ஆய்வுப் பணி மேற்கொள்வதற்காக, இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

சென்னை தலைமைச் செயலகத்தில், பொதுப்பணித் துறை கட்டடங்கள் மற்றும் நீர்வள ஆதாரத் துறை பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தை நடத்திய முதல்வர், பேசியதாவது,

இன்றைக்கு நீர் மேலாண்மை மிக முக்கியமான ஒன்று. அந்த நீர் மேலாண்மையை சிறப்பான வகையிலே அரசு கையாள வேண்டும் என்பதற்காகத் தான், இந்த ஆலோசனைக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இந்த ஆலோசனைக் கூட்டத்தின் மூலமாக, அம்மாவுடைய அரசு அறிவித்த திட்டங்கள், எந்த அளவிற்கு பணி நடைபெற்று கொண்டு இருக்கின்றன, அந்தப் பணியினுடைய விவரங்கள், அதையெல்லாம் ஆராய்ந்து அதற்குண்டான நடவடிக்கைகள் எடுப்பதற்கு தான் இந்த ஆலோசனைக் கூட்டம்.

ஏற்கனவே சட்டமன்றத்தில் சட்டமன்ற 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட பல திட்டங்கள் இங்கே நிறை வேற்றப்பட்டு இருக்கின்றன, நடந்து கொண்டு இருக்கின்றன. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், குடிமராமத்து திட்டம். இந்த குடிமராமத்து திட்டத்தை பொறுத்தவரைக்கும், மிக சிறந்த திட்டம் என்று மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. விவசாயிகளிடத்தும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

பருவ காலங்களில் பெய்து வரும் மழைநீர் முழுவதும் சேமித்து வைக்க வேண்டும் என்பதற்காக ஒரு சிறப்பு திட்டமாக, மக்களோடு மக்கள் இயக்கமாக இதை உருவாக்கி இந்த குடிமராமத்து திட்டத்தை, கடந்த மூன்றாண்டுகள் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு கொண்டு இருக்கிறது.

இந்த நடப்பாண்டை பொறுத்தவரைக்கும், சுமார் 500 கோடி ரூபாயில் 1829 ஏரிகள் குடிமராமத்து திட்டத்தின் மூலமாக எடுத்துக் கொள்ளப்பட்டு, இன்றைக்கு பல ஏரிகளுடைய பணிகள் நிறைவு பெற்று இருக்கின்றன. சில இடங்களில் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. அவையெல்லாம் இந்த கூட்டத்தில் ஆய்வு செய்யப்படுகின்றன.

அத்திக்கடவு – அவிநாசி திட்டம், புரட்சித் தலைவி அம்மா இருக்கின்ற காலக்கட்டத்திலே கனவுக் திட்டமாகும். அந்தப் பகுதி மக்கள் எண்ணியிருந்த அந்தக் கனவு திட்டத்தை அம்மா மறைந்த பிறகு, அம்மாவுடைய அரசு, தொடர்ந்து செயல்படுத்துவதற்காக அறிவிக்கப்பட்டு, அந்த திட்டம் இப்பொழுது நடைபெற்று வருகிறது. அந்தப் பணியின் தற்போதைய நிலை குறித்து ஆராயப்பட இருக்கிறது என்பதை இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கிறேன்.

இது போல பல திட்டங்கள் குறிப்பாக தடுப்பணைகள், மூன்றாண்டு கால திட்டமாக ஆயிரம் கோடி ரூபாயில் தடுப்பணைகள் கட்டப்படும் என்று அறிவித்தோம். அதன் வாயிலாக அந்தப் பணிகள் இப்பொழுது நடைபெற்று கொண்டு இருக்கின்றன. அதன் விவரத்தையும், அதேபோல், நதியின் குறுக்கே, ஓடையின் குறுக்கே, தடுப்பணை கட்டுவதற்காக அறிவிக்கப்பட்ட அந்த திட்டத்தையும் எவ்வாறு நடைபெற்று கொண்டு இருக்கிறது என்பதை எல்லாம் ஆய்வு செய்வதற்காக இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று கொண்டு இருக்கிறது என்பதை இந்த தருணத்திலே தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு  எடப்பாடி பழனிசாமி கூறினார்.