மதுரை:

சிகலா புஷ்பாவை ராமசாமி திருமணம் செய்து கொள்ள மதுரை நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ராமசாமியின் முதல் மனைவி சத்யபிரியா தொடர்ந்த வழக்கில் குடும்ப நல நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

அதிமுகவில் இருந்து ஜெ.வால் நீக்கப்பட்ட அதிமுக எம்.பியான சசிகலா புஷ்பாவுக்கு கணவர் திலகத்திடம் இருந்து விவாகரத்து கிடைத்ததை தொடர்ந்து,  வழக்கறிஞர் ராமசாமி என்பவரை மறுமணம் செய்யப்போவதாக சமூக வலைதளங்களில் செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், சசிகலா புஷ்பாவை திருமணம் செய்யப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்த வழக்கறிஞர் ஏற்கனவே திருமணமானவர் என்றும், அவரது மனைவி பெயர் சத்தியபிரியா என்பதும் தெரிய வந்தது.

தனது கணவரின் இரண்டாவது திருமணம் குறித்து தகவல் அறிந்த முதல் மனைவியான சத்தியபிரியா,  கைக்குழந்தையுடன்  வந்து மதுரை ஆட்சியரிடம்  கண்ணீர் மல்க  புகார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விசாரிக்குமாறு போலீஸ் கமிஷனருக்கு கலெக்டர் பரிந்துரைத்துள்ளார்.

அதைத்தொடர்ந்து, அதிமுக எம்பி சசிகலா புஷ்பாவை திருமணம் செய்ய உள்ள ராமசாமி மீது போலீசார் 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ராமசாமி, அவரின் சகோதரிகள் செல்வி, பாரதி ஆகியோர் மீது 498(ஏ), 294(பி), 506(1) என்கிற நம்பிக்கை மோசடி, மிரட்டுதல் ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதற்கிடையில், கணவர் ராமசாமியின் 2வது திருமணத்துக்கு தடை விதிக்க வேண்டும் என கோரி குடும்ப நல நீதிமன்றத்தில், சத்திய பிரியா வழக்கு தாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த நீதி மன்றம், ராமசாமி 2வது திருமணம் செய்ய தடைவிதித்து  வழக்கை ஒத்தி வைத்தார்.

26ம் தேதி சசிகலா புஷ்பா ராமசாமி  திருமணம் நடைபெற உள்ள நிலையில்,  ராமசாமிக்கு கோர்ட்டு தடை விதித்திருப்பதும், போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் சசிகலா புஷ்பா மறுமணத்தில் சிக்கல் எழுந்துள்ளது.