“அமைதிப்படை 2′, ‘கங்காரு’  ஆகிய இரு திரைப்படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, இயக்கியுள்ள  படம் ‘மிக மிக அவசரம்’.

‘கங்காரு’, ‘வந்தா மல’, ‘கோடை மழை,’ ஸ்கெட்ச் ஆகிய படங்களில் நடித்த ஸ்ரீபிரியங்கா பெண் காவலர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

புதிய கீதை, கோடம்பாக்கம், ராமன் தேடிய சீதை, என் ஆளோட செருப்பைக் காணோம் ஆகிய படங்களின் இயக்குநர் ஜெகன்நாத் கதையை எழுதியுள்ளார்.

புகைப்படம், முத்துக்கு முத்தாக, கோரிப்பாளையம் ஆகிய படங்களில் கதா நாயகனாக நடித்துள்ள அரீஷ் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அவரோடு வழக்கு எண் முத்துராமன், லிங்கா, ஆண்டவன்கட்டளை அரவிந்த், ஈ. ராமதாஸ், சரவண சக்தி, வெற்றிக்குமரன், குணா, வி.கே.சுந்தர், மாஸ்டர் சாமுண்டி ஆகியோர் நடித்துள்ளனர்.

இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் காவல்துறை உயரதிகாரியாக நடித்துள்ளார்.

எப்போதுமே நல்ல படங்களை எடுப்பதிலாகட்டும், அப்படங்களை லாப நஷ்டம் எதிர்பாராமல் மக்கள் மத்தியில் கொண்டுபோய் சேர்ப்பதிலாகட்டும் …தமிழ் சினிமாவில் மிக முக்கியமானவராக தன்னை அடையாளப்படுத்தி வருகிறார் இயக்குநர் வெற்றிமாறன்.

காக்கா முட்டை, விசாரணை, லென்ஸ் என நீளும் அந்த பட்டியலில் இப்போது மிகமிக அவசரம் படத்தையும் சேர்த்திருக்கிறார் இயக்குநர் வெற்றிமாறன்.

பெண் காவலர்கள்  சந்திக்கும் அத்தனை பிரச்சனைகளையும் தைரியமாகப் பேசும் மிக மிக அவசரம் படத்தை இயக்குநர் வெற்றிமாறன் தனது பேனரில் வெளியிட இருக்கிறார்.

கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி உலகம் முழுக்க வெளியிடும் உரிமையைப் பெற்று வெளியிட இருக்கிறது. இப்படத்தின் டிரைலர் வெளியீடு மார்ச் 19 ந்தேதி மிகப் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது.