டிடிவி தினகரன் சிறைக்குச் செல்லும் நேரம் வந்துவிட்டது என்று அமைச்சர் ஜெயக்குமார்  தொடர்ந்து தெரிவித்துவருகிறார்.

இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் தெரிவித்ததாவது:

“புதிய பேருந்துகள் வாங்கவே பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் மக்களுக்கு எந்த குறையும் இல்லை.

அரசியலமைப்பு சட்டத்தின்படி தான் தமிழக ஆளுநர் ஆய்வுகளை மேற்கொள்கிறார்.  தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது. தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது” என்றார்.

மேலும், “ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்ற சதிகள் தொடர்ந்து முறியடிக்கப்பட்டு உள்ளது. டிடிவி தினகரன் தான்  சிறைக்கு செல்லும் காலம் வந்துவிட்டது”  என்று ஜெயக்குமார் கூறினார்.

கடந்த 18ம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “ஜெயலலிதா  மரணம் குறித்து ஆணையம் விசாரணை செய்துகொண்டிருக்கும்போது  டிடிவி தினகரனும், திவாகரனும் தங்கள் விருப்பப்படி பேசி வருகிறார்கள். அவர்கள் மீது  ஆணையம் தாமாகவே முன்வந்து வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்த வேண்டும்” என்று தெரிவித்தது  குறிப்பிடத்தக்கது.

“தொடர்ந்து இப்படி ஜெயக்குமார் பேசி வருவதால், தினகரன் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படுமோ” என்ற ஒரு யூகம் அரசியல் வட்டாரத்தில் கிளம்பியிருக்கிறது.