கோயம்புத்தூர்

கோயம்புத்தூரை சேர்ந்த சில இளைஞர்கள் பசுமை கணபதி என்னும் பெயரில் ரசாயனக் கலவை இன்றி களிமண்ணில் விதைகளை வைத்து தயாரித்துள்ளனர்.

வருடா வருடம் தென் இந்தியாவிலும் பிரம்மாண்ட கணபதி சிலைகள் வைக்கப்பட்டு அவைகளை நீர்நிலையில் கரைக்கும் பழக்கம் பரவி உள்ளது.   அவற்றை ப்ளாஸ்டர் ஆஃப் பாரிஸ் போன்றவற்றில் செய்து, ரசாயன வண்ணம் அடிப்பதால் நீர்நிலைகள் மாசு படிந்து விடுகின்றன.    இதனால் அது போன்ற சிலைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன.   அயினும் அது போலவே சிலைகள் தயாரிக்கப்படுகின்றன.

இந்நிலையில் கோவையை சேர்ந்த சில இளைஞர்கள் பசுமை கணபதி என்னும் பெயரில் சுத்தமான களி மண்னில் எந்த வித ரசாயன கலப்பும் இன்றி சிலைகள் தயாரித்து வருகின்றனர்.   மேலும் அவர்கள் மரம், செடி, கொடி வளர்ப்புக்காக அந்த சிலையினுள் விதைகளையும் வைத்து செய்து வருகின்றனர்.

நகர மக்களில் பலர் வீடுகளில் சிலைகளை கரைத்து தோட்டத்தில் ஊற்றி விடுகின்றனர்.   அவர்களுக்காக, தக்காளி, வெண்டை போன்ற விதைகளையும்,  மரம் வளர்க்க விரும்புவோருக்காக முருங்கை போன்ற விதைகளையும் வைத்து சிலைகளை இளைஞர்கள் தயாரித்து வருகின்றனர்.   அதே போல் நீர்நிலைகளில் கரைக்கப்படும் சிலைகளில் கோதுமை, சோளம் போன்ற விதைகளை வைத்து அவைகள் நீர்நிலைகளில் வளரும் மீன்களுக்கு இரையாகும் என தெரிவிக்கின்றனர்.