டில்லி:

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு எந்தவித சலுகையும் கிடையாது என உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

சசிகலா – இளவரசி – சுதாகரன்

இது குறித்து சட்டவல்லுநர்கள் தெரிவிப்பதாவது:

“பொதுவாக சிறை தண்டனை பெற்றவர்களுக்கும் சில சலுகைகள் உண்டு. மாதத்துக்கு இரு நாட்கள் விடுமுறை என்பது இதில் அடக்கம்.  மொத்த தண்டனை காலத்தில் மாதம் இரு நாட்கள் என்று கணக்கிடப்படும். அதாவது தண்டனை நான்கு வருடம் என்றால் மாதம் இரு நாட்கள் கழிக்கப்பட்டு முன்னதாக விடுதலை ஆவார்கள். தவிர,காந்தி ஜெயந்தி, தீபாவளி போன்ற நாட்களும் இதில் போனஸாக சேர்க்கப்படும்.

ஆனால் கஞ்சா போன்ற போதைப் பொருள் கடத்தல், பாலியல் பலாத்காரம் போன்ற குற்றங்களில் தண்டனை பெற்றவர்களுக்கு இந்த  சலுகை அளிக்கப்படாது.

அதே போல ஒரு வழக்கில் தண்டனை பெற்ற கைதி, வருமானவரி செலுத்துபவர் என்றால் சிறையில் முதல்வகுப்பு கோரி விண்ணப்பிக்கலாம்.  இந்த சலுகையும் கஞ்சா, பலாத்கார குற்றவாளிகளுக்கு கிடையாது.

இதே போலத்தான், சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு சலுகைகள் கிடையாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஆகவே இவர்கள் மூவரும் முதல்வகுப்பு கோர முடியாது என்பதோடு, நான்கு (முழு) வருடங்களும் சிறையில் கழிக்க வேண்டியிருக்கும்” என்று சட்டவல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

மேலும் இவர்கள், “போதப்பொருள் கடத்தில், பாலியல் பலாத்காரம் மட்டுமல்ல.. மக்கள் பணத்தை கொள்ளையடிப்பதும் கொடும் குற்றமே என்பதை உணர்ந்தே இத்தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது” என்றும் தெரிவித்தார்கள்.