சென்னை:
சென்னை பள்ளிக்கரணை காவல்நிலையத்தில் ஈழத் தமிழர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பண்ருட்டி தி.வேல்முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“சென்னையைச் சேர்ந்த மோகன் என்ற ஈழத் தமிழர் விசாரணை என்ற சென்னை மாநகர குற்றப் பிரிவு அதிகாரிகள் பள்ளிக்கரணை காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அங்கு வைத்து அவரை அடித்து துன்புறுத்தி கொடூரமாக சித்ரவதை செய்திருக்கின்றனர். சித்திரவதை தாங்காமல் மோகன் உயிரழந்திருக்கிறார்.
ஆனால் அவர் உயிருடன் இருப்பதைப் போல காட்டுவதற்காக குளோபல் மருத்துவமனைக்கு காவல்துறையினர் கொண்டு சென்றிருக்கிறார்கள். அங்குள்ள மருத்துவர்களோ ஏற்கனவே மோகன் இறந்துவிட்டதாக தெரிவித்துவிட்டனர்.
இப்போது காவல்துறை, மோகன் மாரடைப்பால் உயிரிழந்தார் என்ற பொய்யான தகவலை பரப்பி வருகிறது.
தாய் தமிழ்நாட்டை நம்பி அகதியாக வந்த ஈழத் தமிழரை இப்படி விசாரணை என்ற பெயரில் சித்ரவதை செய்து கொலை செய்திருக்கும் காவல்துறையை வன்மையாக கண்டிக்கிறேன்.
இது தொடர்பான உண்மையை உலகத் தமிழர்களும் ஈழத் தமிழரும் அறிந்து கொள்ள உடனடியாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக முதல்வர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
மேலும் மோகன் குடும்பத்துக்கு ரூ10 லட்சம் நிதி உதவியை தமிழக அரசு வழங்க வேண்டும்: படுகொலைக்கு காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்” என்று தனது அறிக்கையில் வேல்முருகன் கூறியுள்ளார்.
[youtube-feed feed=1]