திரைப்பட விழா ஒன்றில் நேற்று பேசிய சேரன், “திருட்டு விசிடிக்கு காரணமானவர்கள் ஈழத்தமிழர்கள்தான். அவர்களுக்காக போராட்டம் நடத்தியது அருவெறுப்பாக உள்ளது” என்று பேசினார். இதற்கு பல தரப்பிலும் கண்டனம் எழவே, “ஒட்டுமொத்த ஈழத்தமிழர்களையும் நான் குற்றம் சொல்லவில்லை” என்று விளக்கம் அளித்தார்.
சேரனின், “ஈழத்தமிழர் – திருட்டு வி.சி.டி.” கருத்துக்கு ஜி.விஜயபத்மா இயக்குநர் எழுத்தாளர், தனது முகநூல் பக்கத்தில் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

அதற்கு பதிலடியாக சேரன், ““அய்யா, அம்மா.. நான் எந்த போராட்டமும் பண்ணல. நான் உங்க யாரையும் புண்படுத்தனும்னு பேசல. நாங்க சாகும்போது வர்ற புலம்பல் அது. அதுபத்தி நீங்க யாரும் கவலைப்பட வேண்டாம்.” என்று எழுதியதோடு, “சகோதரி விஜயபத்மா மாதிரி சினிமா இல்லாம பிழைக்க வேற வழி தெரிஞ்சிருந்தா நானும் பேசியிருக்க மாட்டேன்…” என்றும் எழுதியிருக்கிறார்.
சக பெண் இயக்குநர் பற்றி இப்படி எழுதியிருக்கிறாரே என்று படித்தவர்கள் அதிர்ந்தனர்.
இந்த நிலையில் ஜி.விஜயபத்மா, “ சேரன் தன் தவறை உணர்ந்து வார்த்தை களை திரும்பப் பெற்று ஈழத்தமிழர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கோரிக்கை முன் வைத்தேன். இது தவறா?
சேரன் இதற்கு தன் பதிலாக என்னைத் தாக்கி பதில் கொடுத்துள்ளார். இதிலிருந்தே இயக்குநர் சேரன் என்ற போர்வையில் இருக்கும் நபரின் சுயரூபத்தைப் புரிந்து கொள்ளுங்கள். அவரிடம் நேர்மையான அணுகுமுறையை எதிர்பார்ப்பது முட்டாள்தனம்.
சகோதரர் சேரன் அவர்களே உங்கள் வீட்டிலும் பெண் குழந்தைகள் வைத்து இருக்கிறீர்கள். “சினிமா இல்லாமல் பிழைக்க வேற வழி தெரிந்தால்” என்று என்னைப்பற்றி நீங்கள் கூறிய கருத்துக்கு நீங்கள் என்றேனும் ஒருநாள் பதில் சொல்லியே ஆகவேண்டும்” என்று தனது பக்கத்தில் ஜி.விஜயபத்மா, சேரனுக்கு சவால் விட்டிருக்கிறார்.

“சமுதாய அக்கறையுடன் படம் எடுக்கும் சேரன், அதை சுவாரஸ்யமாகவும் அளிக்கக்கூடியவர். ஆனால் தேவையில்லாமல் ஏதாவது பேசி சர்ச்சையில் சிக்குவதும் பிறகு அதற்கு விளக்கம் வருத்தம் அளிப்பதும் அவரது வழக்கம். சமீபகாலமாக அப்படி ஏதும் சர்ச்சையில் சிக்காமல் இருந்தார். இப்போது ஈழத்தமிழர்களை கொச்சைப்படுத்தி சர்ச்சையை கிளப்பினர். அடுத்து சக பெண் இயக்குநரை கொச்சைப்படுத்தியிருக்கிறார். யாகவராயினும் நா காக்க என்பார்கள். சேரன் அதை உணர்ந்து பக்குவப்பட வேண்டும்” என்று அவரது நலம் விரும்பிகள் தெரிவிக்கிறார்கள்.
Patrikai.com official YouTube Channel