சென்னை:  குடும்ப தகராறு காரணமாக கூலிப்படையினரால் வெட்டி கொலை செய்யப்பட்ட பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில், குற்றவாளிகள்  9 பேரின் விடுதலையை ரத்து செய்த உச்சநீதிமன்றம், அவர்களுக்கு  ஆயுள் தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது.

மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் குற்றவாளிகளை விடுதலை செய்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அதிரடியாக ரத்து செய்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், குற்றவாளிகளுக்கான தண்டனையை ரத்து செய்தது மிகப்பெரிய தவறு  என சென்னை உயர்நீதிமன்றத்தை சாடியதுடன்,  9 குற்றவாளிகளில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தும், 2 பேருக்கு கருணை கோரவும் அனுமதி வழங்கி உள்ளது.

சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நரம்பியல்  டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்த விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை, உச்ச நீதிமன்றம் இன்று (மே 19) மீண்டும் உறுதி செய்தது.

முதல் குற்றவாளி (A1) பொன்னுசாமி மற்றும் இரண்டாவது குற்றவாளி (A2) மேரி புஷ்பம் ஆகியோரைத் தவிர, மற்ற அனைவருக்கும் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.  இந்த இரண்டு குற்றவாளிகளின் முதிர்ந்த வயது மற்றும் தங்கள் குழந்தைகளைப் பாதுகாக்கும் பெற்றோர் கடமையின் அடிப்படையில், இந்தச் சதித்திட்டத்தில் அவர்கள் வகித்த குறைந்தபட்ச பங்களிப்பு ஆகியவற்றை, தண்டனையைக் குறைப்பதற்கான தணிக்கும் காரணிகளாக நீதிமன்றம் கருத்தில் கொண்டது.  இதன் விளைவாக, A1 மற்றும் A2 ஆகிய இருவரும் 8 வாரங்களுக்குள் தமிழக ஆளுநரிடம் மன்னிப்பு கோர நீதிமன்றம் அனுமதி அளித்தது.

வழக்கின் பின்னணி:

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் வசித்து வந்தவர் பிரபல நரம்பியவர் மருத்துவர் சுப்பையா. . இவருக்கும் இவருடைய உறவினரான பொன்னுசாமி குடும்பத்தினருக்கும் இடையே கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் பகுதியில் உள்ள, சுமார் ரூ.10 கோடி மதிப்பிலான 2 நிலம் தொடர்பாக நீண்ட நாட்களாக பிரச்னை இருந்து வந்தது.

இதுதொடர்பான வழக்கில், அந்த சர்ச்சைக்குரிய நிலையம், டாக்டர் சுப்பையாவுக்கே சொந்தமானது என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனால், கோபமடைநத அவரது உறவினர்கள், கூலிப்படையினர் கொண்டு,  சுப்பையாவை தீர்த்துக்கட்ட முடிவு செய்தனர்.  அதன்படி, கடந்த  2013-ம் ஆண்டு செப்டம்பர் 14-ஆம் தேதி (முதற்கட்ட தகவல்களின்படி செப்.9) ராஜா அண்ணாமலைபுரத்தில்  காலையில் சாலையோரம் நடைபயிற்சி சென்ற டாக்டர் சுப்பையா கூலிப்படையினரால் கொடூரமாக வெட்டப்பட்டார்.  பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்  சிகிச்சை பலனின்றி செப்டம்பர் 23-ம் தேதி அவர் உயிரிழந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம், கைதான 10 பேரில் அப்ரூவரான அய்யப்பனைத் தவிர்த்து மற்ற 9 பேரைக் குற்றவாளிகள் என்று 2021-ல்   அறிவித்தது. பொன்னுசாமி, பாசில், போரிஸ், வில்லியம்ஸ், ஜேம்ஸ் சதீஷ்குமார், முருகன், செல்வ பிரகாஷ் ஆகிய 7 பேருக்கு மரண தண்டனையும் மேரி புஷ்பம் மற்றும் ஏசுராஜன் ஆகிய 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது.

2024-ல் இந்த தண்டனையை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி 9 பேரையும் முற்றிலுமாக விடுதலை செய்து உத்தரவிட்டது.

உயர் நீதிமன்றத்தின் இந்த விடுதலையை எதிர்த்துத் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இம்மனுவை நீதிபதிகள் பேலா எம். திரிவேதி, சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. தமிழக அரசு தரப்பில் மூத்த வழக்குரைஞர்கள் முகுல் ரோத்தகி மற்றும் டி.குமணன் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.

இந்த வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியது.  இந்த வழக்கில் குற்றவாளிகளை விடுவித்த சென்னை  உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை கடுமையாக விமர்சித்தனர். பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் மருத்துவர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். சிசிடிவி காட்சிகள் மற்றும் உரிய ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணை நீதிமன்றம் அளித்த தீர்ப்பை, முறையாக ஆராயாமல் சென்னை உயர் நீதிமன்றம் அனைவரையும் விடுதலை செய்தது மிகப்பெரிய தவறு. இது எங்களுக்குப் பெரும் வியப்பை அளிக்கிறது.

விடுவிக்கப்பட்ட 9 பேரின் விடுதலையையும் ரத்து செய்து, அவர்கள் அனைவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது. வழக்கில் தொடர்புடைய பொன்னுசாமி மற்றும் அவரது மனைவி மேரி புஷ்பம் ஆகியோரைத் தவிர, மற்ற அனைத்துக் குற்றவாளிகளும் உடனடியாக காவல்துறையிடம் சரணடைய வேண்டும்.

முதன்மைக் குற்றவாளிகளான பொன்னுசாமி மற்றும் மேரி புஷ்பம் ஆகியோர் தங்களது மகன்களின் தூண்டுதலின்பேரில் இதில் ஈடுபட்டு உள்ளனர். எனினும், அவர்களின் வயதைக் கருத்தில் கொண்டு தண்டனைக் குறைப்பு கோரி தமிழக ஆளுநரிடம் மனு அளிக்கலாம். ஆளுநர் இதில் இறுதி முடிவு எடுக்கும் வரை இவ்விருவருக்கான தண்டனை மட்டும் நிறுத்தி வைக்கப்படுகிறது. தமிழக அரசின் உறுதியான மேல்முறையீட்டு நடவடிக்கையால், 13 ஆண்டுகளுக்குப் பிறகு மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் குற்றவாளிகளுக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது சட்டவல்லுநர்கள் மத்தியில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

[youtube-feed feed=1]