சென்னை:  திமுக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான வேலைவாய்ப்பு முறைக்கேடு வழக்கில் தொடர் விசாரணை செய்ய அனுமதி கோரி, புதிய ஆதாரங்களுடன் தமிழக தலைமைச் செயலாளருக்கு அமலாக்கத்துறை மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளது.

போக்குவரத்துக் கழக வேலைவாய்ப்பு முறைக்கேடு வழக்கில், முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி மற்றும் சிலருக்கு எதிராக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பதற்கான அனுமதியை வழங்குமாறு கோரி, தமிழக தலைமைச் செயலாளர் எம். சாய் குமாருக்கு அமலாக்கத்துறை (ED) மீண்டும் ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளது.

இந்த விவகாரத்தில் முந்தைய தி.மு.க அரசுக்கு இரு முறை அமலாக்கத்துறை கடிதம் எழுதியும் அதற்கு திமுக அரசு  அனுமதி வழங்க மறுத்து ஏழு மாதங்கள் ஆன நிலையில், மத்திய புலனாய்வு அமைப்பான அமலாக்கத்துறை தற்போது இந்த புதிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதற்கிடையில், அரசு அனுமதி வழங்க உத்தரவிட கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநல மனுக்கள் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், அமலாக்கத்துறை,  கடந்த மே 15ஆம் தேதிதமிழ்நாடு அரசுக்கு அனுப்பியுள்ள  மூன்று பக்கங்கள் கொண்ட இந்த கடிதத்தில் , 2025 மே 14 அன்று அப்போதைய ஆளுநருக்கு அனுப்பப்பட்ட முந்தைய அனுமதி கோரும் கடிதம், மாநில அரசின் வழிகாட்டுதலின்படி இந்த ஆண்டு பிப்ரவரி 23 அன்று திருப்பி அனுப்பப்பட்டதாக அமலாக்கத்துறை குறிப்பிட்டுள்ளது.

ஒரு பொதுஊழியரை விசாரிப்பதற்கான அனுமதியை வழங்க மாநில அரசுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்றும், எனவே அமலாக்கத்துறை ஆளுநரை அணுகுவதற்குப் பதிலாக நேரடியாகத் தலைமைச் செயலாளருக்கே கடிதம் எழுதியிருக்க வேண்டும் என்றும் அப்போதைய தலைமைச் செயலாளர் 2025 அக்டோபரில் ஆளுநருக்குத் தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையிலேயே முந்தைய கோரிக்கை திருப்பி அனுப்பப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, தற்போதைய புதிய கடிதத்துடன் இந்த வழக்கு தொடர்பான அனைத்து முக்கிய ஆதாரங்கள், விசாரணையின் ரகசியக் குறிப்புகள் மற்றும் புகார் நகல் ஆகியவற்றை ஒரு பென் டிரைவில் இணைத்து அமலாக்கத்துறை அனுப்பியுள்ளது.

இக்கடிதம் தலைமைச் செயலாளர் அலுவலகத்தால் முறைப்படி பெற்றுக்கொள்ளப்பட்டு, அதற்கான ஒப்புதலும் வழங்கப்பட்டுள்ளது.

வழக்கின் பின்னணி

கடந்த 2011 முதல் 2016 வரையிலான காலகட்டத்தில்  மறைந்த ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியின்போது, செந்தில் பாலாஜி போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது, அந்தத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சட்டவிரோதமாகப் பணம் பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வேலைவாய்ப்பு முறைக்கேடு விவகாரத்தில் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் ஆர்.வி. அசோக் குமார் மற்றும் அவரது தனி உதவியாளர்களான பி. சண்முகம், எம். கார்த்திகேயன் ஆகியோர் மீது சட்டவிரோதப் பணப் பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கின் அடிப்படையில் 2023 ஜூன் மாதத்தில் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். பின்னர், செப்டம்பர் 2024-ல் உச்ச நீதிமன்றத்தால் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் விடுவிக்கப்பட்டார். அதே  நேரத்தில், இந்த சட்டவிரோதப் பணப் பரிமாற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தனது புகார் மனுவைத் தாக்கல் செய்துள்ளது. இருப்பினும், குற்றம் நடந்ததாகக் கூறப்படும் காலகட்டத்தில் அவர் அமைச்சராக இருந்ததால், இந்த வழக்கின் விசாரணையைத் தொடங்குவதற்கு மாநில அரசின் முறையான அனுமதி இன்னும் கிடைக்கப் பெறாமல் நிலுவையில் உள்ளது.

இதனால் இந்த வழக்கின் நீதிமன்ற விசாரணை இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது. இந்த நிலையில், தற்போது அமலாக்கத்துறை மீண்டும் கடிதம் எழுதி உள்ளது.  இந்த வழக்கு தவெக அரசு அனுமதி வழங்குமா என்பது விரைவில் தெரிய வரும்.

நீதிமன்ற விசாரணைக்கு செந்தில்பாலாஜி நேரில் ஆஜராகத்தான் வேண்டும்! நீதிமன்றம் உத்தரவு

[youtube-feed feed=1]