மக்களவை தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு அளிக்க வேண்டுமென்றால், மத்திய அரசு 3 முக்கிய மாற்றங்களை செய்ய வேண்டும் என்று திமுக நிபந்தனை விதித்துள்ளது.
மக்களவை தொகுதிகள், 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இந்த நடைமுறை, அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்த பிறகு மாற்றப்பட வாய்ப்புள்ளது. 2027-ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு தொகுதிகளை நிர்ணயிக்கும் நடைமுறையை மேலும் 25 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்று திமுக வலியுறுத்துகிறது.

மேலும், அனைத்து மாநிலங்களுக்கும் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை ஒட்டுமொத்தமாக 50 சதவீதம் அதிகரிக்க வேண்டும் என்றும் திமுக கோருகிறது. தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதா ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டபோது, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இதுதொடர்பாக வாய்மொழியாக உறுதியளித்ததாக திமுக தரப்பில் கூறப்படுகிறது.
அதேபோல், ஒவ்வொரு மாநிலத்துக்கும் எத்தனை மக்களவை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பதை மசோதாவிலேயே தெளிவாக பட்டியலிட வேண்டும் என்றும் திமுக வலியுறுத்தியுள்ளது.
திமுகவின் 3 நிபந்தனைகள்:
- 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்ட தொகுதி நிர்ணயத்தை மேலும் 25 ஆண்டுகளுக்கு தொடர வேண்டும்.
- அனைத்து மாநிலங்களிலும் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை 50 சதவீதம் அதிகரிக்க வேண்டும்.
- ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒதுக்கப்படும் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை மசோதாவில் தெளிவாக குறிப்பிட வேண்டும்.
இந்த நிபந்தனைகள் தொடர்பாக மத்திய அரசு இதுவரை திமுகவை அதிகாரப்பூர்வமாகவோ, அதிகாரப்பூர்வமற்ற முறையிலோ அணுகவில்லை என்று திமுகவின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மசோதாவின் முழு வடிவம் மற்றும் அதில் இடம்பெறும் அம்சங்கள் தெரிய வந்த பிறகே ஆதரவு குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் திமுக தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்க்கட்சிகளின் ஆதரவை பெற மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியுடன் தொடர்ந்து பேசி வருகிறார்.
தொகுதி மறுவரையறைக்காக அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.