டெல்லி: மத்தியஅரசு, நாடு முழுவதும் உள்ள தொழிலாளா்களுக்குமான இலவச வருடாந்திர உடல் பரிசோதனை திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தை மத்தியஅமைச்சர் மன்சுக் மாண்டவியா தொடங்கி வைத்தார்.
நாடு முழுவதும் 40 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய அனைத்துத் தொழிலாளா்களுக்குமான இலவச வருடாந்திர உடல் பரிசோதனை திட்டத்தை மத்திய தொழிலாளா் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா மே 7 ந்தேதி தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியானது, டெல்லியில் உள்ள இஎஸ்ஐசி மருத்துவக் கல்லூரி – மருத்துவமனையில் நடைபெற்றது. நிகழ்ச்சியை தொடங்கி பேசிய மத்தியஅமைச்சர், நாடு முழுவதும் உள்ள தொழிலாளா்களின் நலன், சமூகப் பாதுகாப்பு, கெளரவத்தை உறுதிப்படுத்தும் வகையில் 4 புதிய தொழிலாளா் சட்டங்களை மத்திய அரசு அண்மையில் நடைமுறைப்படுத்தியது. அனைத்துத் தொழிலாளா்களின் சமூகப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கு மத்திய அரசு உறுதியேற்றுள்ளது.
வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் சமூக நலத் திட்டங்கள் மூலமாக தொழிலாளா் சக்தி மற்றும் இளைஞா் சக்திக்கு அதிகாரமளிப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது..மத்திய அரசின் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளின் எண்ணிக்கை 10 ஆண்டுகளுக்கு முன்பு 30 கோடியாக இருந்தது. தற்போது 94 கோடியாக அதிகரித்துள்ளது. அதாவது 19 சதவீதத்திலிருந்து 64 சதவீதமாக பயனாளிகள் எண்ணிக்கை உயா்ந்துள்ளது..
அதுபோல, தொழிலாளா் மாநில காப்பீட்டுக் கழக திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகள் எண்ணிக்கை 10 ஆண்டு களுக்கு முன்பு 7 கோடியாக இருந்தது, தற்போது 15-ஆக அதிகரித்துள்ளது.
தற்போது, தொழிலாளா்களுக்கான வருடாந்திர உடல் பரிசோதனை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், நாடு முழுவதும் உள்ள 40 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய அனைத்துத் தொழிலாளா்களும் ஆண்டுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை நடத்தப்படும்.
நாடு முழுதும் உள்ள இஎஸ்ஐசி மருத்துவமனைகள் மூலம் நடத்தப்படும் முகாம்கள் மூலம் இந்த உடல் பரிசோதனை நடத்தப்படும். முன்கூட்டிய உடல் நல பாதிப்புகளைக் கண்டறிவதன் மூலம், தீவிர உடல் நல பாதிப்புகள் ஏற்படுவதைத் தடுக்க முடியும்.
இவ்வாறு கூறினார்.
[youtube-feed feed=1]