சென்னை: தவெக தலைவர் விஜயின் பெரம்பூர் பிரசாரத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ள நிலையில்,  ”காபந்து அரசுக்கு வெட்கமாக இல்லையா?”  என திமுக அரசுக்கு எதிராக விஜய் கொந்தளித்துள்ளார்.

தவெக  தலைவர் விஜயினு பெரம்பூர் பிரச்சாரத்துக்கு காவல் துறை அனுமதி மறுத்த நிலையில், இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் விஜய் காட்டமாக விமர்சித்துள்ளார்.

தவெக தலைவர் விஜய்  இன்று  (மார்ச் 28) பெரம்பூர் உள்பட 5 இடங்களில்  தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதி கோரப்பட்டிருந்தது. இந்த பெரம்பூரில் அவர் பிரசாரம் செய்ய கோரப்பட்ட த இடம் நெருக்கடியானது என்றுகூறி, பாதுகாப்பு வழங்க முடியாது காவல்துறை அனுமதி மறுத்தது. இந்த காரணத்தைச் சுட்டிக்காட்டி தேர்தல் ஆணையம் வேறு இடம் பார்க்குமாறு தெரிவித்திருந்தது.

தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கை கடுமையாக விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.  அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்து வரும் நிலையில், விஜய் பிரசாரத்துக்கு அனுமதி வழங்க மறுக்கும் காவல்துறையின் நடவடிக்கை விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.
இந்த நிலையில், அதிகாரிகள் சிலரின் துணையுடன் த.வெ.க.விற்கு எதிராகச் செயல்படும் தி.மு.க. காபந்து அரசுக்கு வெட்கமாக இல்லையா என்று தவெக தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து இப்போது அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ’’தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் திட்டமிடப்பட்ட பரப்புரைக்குச் சென்னை மாநகரக் காவல் துறையும், அதிகாரிகள் சிலரும் இணைந்து முட்டுக்கட்டை போட்டிருப்பது, ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்டுள்ள ஒரு பாசிசத் தாக்குதலே ஆகும்.

நிகழ்ச்சிக்கு இரண்டு நாள்கள் முன்பே (26/03/26) தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், சென்னை பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி, முல்லை நகர் சந்திப்பில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள அனுமதி கோரப்பட்டது.

திடீரெனத் தோன்றிய பள்ளம், தடுப்புகள்

ஆனால், நம்முடைய தேர்தல் பரப்புரை நிகழ்வுக்கு ஒரு நாளுக்கு முன்பு சென்னை மாநகராட்சி சார்பில் திடீரென அந்த இடத்தில் பள்ளம் தோண்டப்பட்டு, இரும்பால் ஆன தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த திடீர்ப் பள்ளங்களும் தடுப்புகளும் எங்கிருந்து வந்தன??

இந்த நிலையில் அங்கே காவல் துறை ஆய்வு செய்து 3000 பேர் கூடமுடியாது என்று கூறியுள்ளது. இதன் அடிப்படையில் தற்போது அந்த இடம் பிரசாரம் செய்வதற்கு உகந்ததல்ல என்று அனுமதி மறுக்கப்பட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இப்படி அதிகாரிகள் சிலரின் துணையுடன் த.வெ.க.விற்கு எதிராகச் செயல்படும் தி.மு.க. காபந்து அரசுக்கு வெட்கமாக இல்லையா?

தாமதிப்பு அல்லது அனுமதி மறுப்பு

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நான் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள முயற்சி செய்யும் போதெல்லாம், தி.மு.க. அரசு ஏதேதோ காரணங்களைக் கூறி, அனுமதியைத் தாமதிப்பதும் அல்லது அனுமதி மறுப்பதும் தொடர்கதையாகி வருகிறது.

மக்களின் பேராதரவைப் பெற்ற ஒரு புதிய அரசியல் கட்சியின் ஜனநாயக உரிமைகளைத் திட்டமிட்டு நசுக்கும் இந்தச் செயல், ஆளுங்கட்சியின் ஏவலர்களாக அதிகாரிகள் சிலர் செயல்படுகிறார்களா என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. அத்துடன் “எங்களுக்கு எதிராக யார் உருவெடுத்தாலும் அவர்களை அதிகார பலத்தால் நசுக்குவோம்” என நினைப்பது அப்பட்டமான அடக்குமுறையே ஆகும்.

தமிழக வெற்றிக் கழகத்தைக் கண்டு தி.மு.க. எந்த அளவிற்கு அஞ்சுகிறது என்பதற்கு இந்தத் தடையே சாட்சி. எனவே, வரும் சட்டமன்றத் தேர்தலில் ஜனநாயக விரோதத் தி.மு.க. ஆட்சியைத் தமிழக மக்கள், வீட்டிற்கு அனுப்பப் போவது உறுதி’’ என்று விஜய் தெரிவித்துள்ளார்.

[youtube-feed feed=1]