சென்னை:  தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு அன்று வாக்களிக்க தேவையான ஆவணங்கள் என்னென்ன?  என்பதுகுறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்  தெரிவித்துள்ளார்.

அதன்படி, ஆதார் அட்டை உள்பட   13 அடையாள ஆவணங்கள் தகுதியானவை என குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக  தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி,  ஏப்ரல் 23 (வியாழக்கிழமை) அன்று தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து வாக்கு எண்ணிக்கை மே 4 (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. அன்றைய தினம் மதியமே ஆட்சியை கைப்பற்றப்போவது யார் என்பது தெரிய வரும். இந்த தேர்தலுக்கான  வேட்பு மனுத் தாக்கல் துவக்கம்: மார்ச் 30ந்தேதி தொடங்குகிறது.  வேட்பு மனுத் தாக்கல் கடைசி நாள்   ஏப்ரல் 06ந்தேதி.  இதையடுத்து  வேட்பு மனு பரிசீலனை –  ஏப்ரல் 07ந்தேதியும்,  வேட்பு மனுத் திரும்பப் பெற இறுதி நாள்  ஏப்ரல் 09ந்தேதி  என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் தேர்தலன்று வாக்காளர்கள் வாக்கினை செலுத்த கொண்டு வர வேண்டிய அடையாள ஆவணங்கள் குறித்து  தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,   தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளான மார்ச் 15 ஆம் முதல் உடனடியாக தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. தேர்தல் செயல்முறைகள் முடியும் வரை இவ்விதிமுறைகள் அமலில் இருக்கும்.

இவ்விதிமுறைகள் அனைத்து அரசியல் கட்சிகள், போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அரசுத் துறைகள் அனைத்திற்கும் பொருந்தும் அனைத்து வாக்காளர்களும் தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை முன்கூட்டியே சரிபார்த்து, தங்கள் பகுதி எண் (Part No) மற்றும் வரிசை எண் (Serial No) ஆகியவற்றைத் தெரிந்து கொண்டு, தங்களது வாக்குச்சாவடி இருப்பிடத்தை முன்கூட்டியே அறிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வாக்காளர் பட்டியலில் பெயரை அறிய இணையதள வாக்காளர் தேடல் வசதி மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலக உதவி மையம் மூலம் உதவி பெறலாம். Advertise with us மாநில / மாவட்ட அளவில் செயல்படும் கட்டணமில்லா எண்: 1800-4252-1950 மற்றும் மாவட்ட தொடர்பு மையம் எண் 1950 ஆகியவை 24×7 என்ற கால அளவில் செயல்படுகிறது. வாக்காளர்கள் https://voters.eci.gov.in⁠ என்ற இணையதளத்தில் தங்கள் வாக்காளர் பட்டியல் விவரங்கள், வாக்குச்சாவடி இருப்பிடம், வாக்குச்சாவடி நிலைய அலுவலர் தொடர்பு விவரங்கள் போன்ற தகவல்களை அறியலாம். மேலும் ஆன்லைன் புகார்களை தேசிய குறைதீர்ப்பு சேவை மைய இணையதளம் மூலமும் பதிவு செய்யலாம்.

வாக்காளர்கள் தங்கள் புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை அல்லது கீழ்கண்ட 12 அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை வாக்களிக்க பயன்படுத்தலாம்

. 1. ஆதார் அட்டை.

2. MGNREGA பணி அட்டை.

3. புகைப்படத்துடன் கூடிய அஞ்சல் அலுவலக / வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம்.

4. மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்தால் வழங்கப்பட்ட சுகாதார காப்பீட்டு அட்டை / ஆயுஷ்மான் பாரத் சுகாதார அட்டை.

5. ஓட்டுநர் உரிமம்.

6. PAN அட்டை.

7. தேசிய மக்கள் தொகைப்பதிவேட்டின் கீழ் இந்திய பதிவாளர் ஜெனரலால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை.

8. இந்திய கடவுச்சீட்டு. 9. புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்.

10. புகைப்படத்துடன் கூடிய மத்திய, மாநில அரசு / பொதுத்துறை நிறுவன ஊழியர் அடையாள அட்டை.

11. அங்கீகரிக்கப்பட்ட நாடாளுமன்ற / சட்டமன்ற / சட்டமேலவை உறுப்பினர் அடையாள அட்டை.

12. ஊனமுற்றோருக்கான அடையாள அட்டை (சமூக நீதி மற்றும் அதிகாரமளிக்கும் துறை, இந்திய அரசு) ஆகியவையாகும்.

 சுதந்திரமான மற்றும் வெளிப்படையான தேர்தலை உறுதி செய்ய பின்வரும் புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

வாக்குச்சாவடிகளில் கைப்பேசி பாதுகாப்பு அறை.

தெளிவான வாக்காளர் தகவல் சீட்டு.

வேட்பாளர்களின் வண்ணப்புகைப்படம்

பெரிய எழுத்துருவில் வாக்குச்சீட்டு.

அதிகபட்சம் ஒரு வாக்குச்சாவடிக்கு 1200 வாக்காளர்கள்.

வாக்குச்சாவடிக்கு 100 மீட்டர் தொலைவில் வேட்பாளர் முகாம் அமைத்தல்.

ECINET – ஒருங்கிணைந்த டிஜிட்டல் சேவை தளம்.

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் 100% இணையவழி ஒளிபரப்பு.

வாக்குச்சாவடி நிலை அலுவலருக்கான புகைப்பட அடையாள அட்டை

உள்ளிட்ட புதிய வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன.

[youtube-feed feed=1]