சென்னை: சென்னை மெட்ரோ பயணிகளுக்காக 11 முக்கிய நிலையங்களில் 220 மினி மற்றும் மைக்ரோ பேருந்துகள் மூலம் 5 நிமிட இடைவெளியில் ‘கடைசி மைல் இணைப்பு’ சேவை வழங்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

சென்னை மெட்ரோ இரயில் பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையான ‘கடைசி மைல் இணைப்பு’ வசதியை மேம்படுத்த, தமிழக அரசு தற்போது கொள்கை ரீதியிலான ஒப்புதலை வழங்கியுள்ளது. மெட்ரோ நிலையங்களுக்கு வந்து செல்வதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களைக் களைந்து, பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது சென்னை மெட்ரோவில் தினசரி சுமார் 3 முதல் 3.2 லட்சம் பயணிகள் வரை பயணம் செய்கின்றனர். இருப்பினும், பலருக்கு தங்கள் வீடுகளில் இருந்து மெட்ரோ நிலையங்களுக்குச் செல்வதற்கும், நிலையங்களில் இருந்து அலுவலகங்களுக்குச் செல்வதற்கும் முறையான போக்குவரத்து வசதி இல்லாதது ஒரு பெரும் குறையாகவே இருந்து வருகிறது. இந்த இடைவெளியைப் போக்க, ‘மெட்ரோ அட் தி டோர்ஸ்டெப்’ என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

பிப்ரவரி 18, 2026 அன்று இதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் ஆகியவற்றின் பரிந்துரையின் பேரில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. முதற்கட்டமாக, அதிக நடமாட்டம் உள்ள 11 முக்கிய மெட்ரோ நிலையங்களில் இந்தச் சேவை தொடங்கப்படும். இதில் திருமங்கலம், வடபழனி, கோயம்பேடு, கிண்டி, ஆலந்தூர், மீனம்பாக்கம், ஓ.டி.ஏ நங்கநல்லூர், செயின்ட் தாமஸ் மவுண்ட், வண்ணாரப்பேட்டை, விம்கோ நகர் மற்றும் விமான நிலையம் ஆகிய நிலையங்கள் அடங்கும்.

இந்தத் திட்டத்திற்காக மொத்தம் 220 வாகனங்கள் கொண்ட புதிய படை களமிறக்கப்பட உள்ளது. இதில் 19 பேர் அமர்ந்து செல்லக்கூடிய 70 சிறிய பேருந்துகளும் 12 பேர் அமரக்கூடிய 150 மைக்ரோ பேருந்துகள் அல்லது வேன்களும் இடம்பெறும். இவை பெரும்பாலும் மின்சார வாகனங்களாக இருக்கும் என்பது சுற்றுச்சூழலுக்கு கூடுதல் வலு சேர்க்கிறது. தற்போதுள்ள சிற்றுந்துகள் 20 நிமிடங்களுக்கு ஒருமுறை மட்டுமே இயக்கப்படும் நிலையில், இந்தப் புதிய பேருந்துகள் 5 நிமிட இடைவெளியில் இயக்கப்படத் திட்டமிடப்பட்டுள்ளது.

மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, மெட்ரோ நிர்வாகம் நேரடியாக சாலைப் போக்குவரத்து சேவைகளை வழங்க முடியாது என்பதால், இந்தப் பேருந்துகள் மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் மூலமாக இயக்கப்படும். இதற்கான வழித்தடங்களைத் திட்டமிடுதல் மற்றும் ஒருங்கிணைக்கும் பணிகளை சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் மேற்கொள்ளும்.

இந்த முன்னெடுப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள போக்குவரத்து நிபுணர்கள், இத்திட்டத்தை வரவேற்கும் அதே வேளையில், வழக்கமான பேருந்து வழித்தடங்களோடு இவை மோதாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்துகின்றனர். மேலும், இந்தச் சேவையை புறநகர் இரயில் நிலையங்களுக்கும் விரிவுபடுத்தினால் அது பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவோருக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

[youtube-feed feed=1]