சென்னை: ராஜ்யசபா தேர்தலில் திமுக சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் இன்று வேட்புமனு தாக்கல் செய்கின்றனர்.
தமிழகத்தில் திமுக சார்பில் திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர். இளங்கோ, கனிமொழி சோமு, அதிமுக சார்பில் தம்பிதுரை மற்றும் கடந்த முறை அதிமுக கோட்டாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜி.கே.வாசன் ஆகியோரின் பதவிக் காலம் ஏப்ரல் 2-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த 6 இடங்களுக்கான தேர்தல் கடந்த பிப்.18-ம் தேதி அறிவிக்கப் பட்டது.

அதன்படி வேட்பு மனு தாக்கல் கடந்த பிப்.26-ம் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய இன்று (மார்ச் 5ந்தேதி) கடைசி நாள். இந்நிலையில் திமுக சார்பில் துணைப் பொதுச்செயலாளர் மற்றும் திமுக மாநிலங்களை குழு தலைவராக உள்ள திருச்சி சிவா, செய்தித் தொடர்பு பிரிவு செயலாளர் ஜெ.கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
திமுகவுக்கான 4 இடங்களில் ஏற்கெனவே ஒரு இடத்தை கூட்டணி கட்சியான தேமுதிகவுக்கு வழங்கப்பட்டது. மற்றொரு இடம், காங்கிரஸூக்கு நேற்று வழங்கப்பட்டது.
தேதிமுக சார்பில் எல்கே சுதீஷ் வேட்பாளராக களமிறங்குகிறார். அதுபோல, காங்கிரஸ் சார்பில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த முன்னாள் எம்.பி. மீனாட்சி நடராஜன் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்கின்றனர்.
இதைத்தொடர்ந்து, நாளை வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெறுகிறது. 9-ம் தேதி வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. வரும் மார்ச் 16ம் தேதி காலை 9 முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அன்று மாலை 5 மணிக்கே வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த தேர்தல் நடைமுறைகள் மார்ச் 20-ம் தேதி நிறைவடைகிறது.