மதுரை: திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை மதிக்காத, மாவட்ட ஆட்சியர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், மாவட்ட ஆட்சியர் பதில் தெரிவிக்க உயர்நீதிமன்றம் மதுரை கெடு விதித்துள்ளது. இன்றுக்குள் பதில் தெரிவித்தால் வழக்கை முடித்து வைப்பதாக தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில், கோவில் சொத்துக்கள் அறநிலையத்துறைக்குச் சொந்தமானவை அல்ல என நீதிபதி ஜி.ஆர். சுவாமி நாதன் தெரிவித்துள்ளார். அதாவது, ‘திருப்பரங்குன்றம் மலை உச்சியில் 5 பேர் பூஜை செய்ய அனுமதித்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடிக்கப்படும் என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கூறியுள்ளார்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும் திமுக அரசு தடுத்து நிறுத்தியது. அரசுக்கு ஆதரவாக மாவட்ட கலெக்டர் எஸ்பி. என பலரும் இந்து மக்களுக்கு எதிரான மனநிலையில் செயல்பட்டனர். இதனால், மதுரையில் இந்துக்கள் கூடத்தொடங்கினர். இதையடுத்து அங்கு 144 தடை போடப்பட்டது.
இதற்கிடையில் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத மாவட்ட ஆட்சியர் உள்பட அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இதற்கிடையில், இந்த விவகாரத்தில் திமுக அரசு, உயர்நீதிமன்றம் அமர்வு, உச்சநீதிமன்றம் வரை சென்றும், அவர்கள் நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு சரி என்றே தெரிவித்தனர்.
இதற்கிடையில், மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் மீதான கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு பிப்ரவரி 2ந்தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது.
விசாரணைக்கு மதுரை மாவட்ட கலெக்டர் பிரவீன் குமார், நீதிபதி முன் ஆஜரானார். கலெக்டர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கிரி, கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன் ஆகியோர் ஆஜராகி, பதில் மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனுவில், ‘‘நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றாது குறித்து மீண்டும் வருத்தம் தெரிவித்து கொள்கிறோம். சம்பவத்தின்போது சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்ற அடிப்படையில் தான் 144 தடை உத்தரவு பிறப்பித்தோம். எந்த உள்நோக்கமும் இல்லை. இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது. சட்டம், ஒழுங்கு பிரச்னையையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
கார்த்திகை தீபத்தின் போது தீபம் ஏற்ற வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த முயற்சிக்கும்போது, இந்து முன்னணி அமைப்பினருக்கும், மற்றவர்களுக்கும் இடையே பிரச்னை ஏற்படும் சூழல் உருவானது. இதனால் தான் 144 தடை உத்தரவு உரிய ஆவணங்களின் அடிப்படையில் பிறப்பிக்கப்பட்டது. அதன் பின்னரே நிலைமை கட்டுக்குள் வந்தது. சட்டத்தை செயல்படுத்த வேண்டியது தான் நிர்வாகத்தின் கடமை. எனவே, இதற்காக மன்னிப்பு கோருகிறேன். அடுத்த கார்த்திகை தீபம் வருவதற்கு முன் உரிய முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கிறோம். எனவே, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைக்க வேண்டும்’’ என்றனர்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், கோயில் சொத்துக்களின் உரிமை குறித்து நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் மிக முக்கியமான சட்ட விளக்கத்தை அளித்துள்ளார்.
“கோயில் சொத்துக்கள் அனைத்தும் அறநிலையத்துறைக்குச் சொந்தமானவை அல்ல; அவை அந்தந்தக் கோவிலுக்கே சொந்தமானது” என்பதைத் தெளிவுபடுத்தினார். கோயில் சொத்துக்கள் மற்றும் நடைமுறைகள் குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் அறங்காவலர்களுக்கே உண்டு என்பதால்தான் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டு உள்ளதாகவும் நீதிபதி குறிப்பிட்டார்.
திருப்பரங்குன்றம் மலை உச்சிக்குச் சென்று தீபம் ஏற்ற அல்லது பூஜை செய்ய 5 பேர் கொண்ட குழுவை அனுமதிப்பது குறித்து அரசு தரப்பில் எடுக்கப்பட்ட முடிவு என்ன? என்பது குறித்து நாளை (மார்ச் 4) விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கில் முறையான விளக்கம் அளிக்க ஏதுவாக, மார்ச் 4-ஆம் தேதி மாலை 4:30 மணிக்கு மதுரை மாநகரக் காவல் ஆணையர், இணை ஆணையர், கோயில் செயல் அலுவலர், கோவில் அறங்காவலர்கள் ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தற்போது இந்த வழக்கில் 5 பேர் மட்டும் மலை உச்சிக்கு சென்று சின்னதாக ஒரு ஐந்து நிமிட பூஜை செய்தால் போதும். இந்த வழக்கை நான் முடித்து வைத்து விடுகிறேன். அதாவது, “நீதிமன்றம் சொல்லும் ஐந்து நபர்களை மலை உச்சி சென்று பூஜை செய்ய அனுமதிக்க வேண்டும்; அவ்வாறு அனுமதித்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைக்கிறேன்” எனக் கூறிய நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மதுரை மாவட்ட ஆட்சியர் உரிய முடிவெடுத்து இன்று மறுநாள் 4 மணிக்கு தெரிவிக்க உத்தரவிட்டுள்ளார்.