சென்னை:  திமுக ஆட்சியில் குழந்தைகளுக்கு கூட பாதுகாப்பு இல்லை என கிருஷ்ணகிரி குழந்தைக்கு நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து  பாமக தலைவர் அன்புமணி   தமிழ்நாடு அரசை கடுமையான சாடியுள்ளார்.

தமிழகத்தில் நடைபெறும் பெரும்பான்மையான குற்றங்களுக்கு திமுக நிர்வாகிகள் தான் காரணம் என்றும், திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 54 விழுக்காடும், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 61 விழுக்காடும் அதிகரித்திருக்கின்றன. இதற்கு திமுக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இரண்டரை வயது குழந்தையை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய புகாரில் திமுக ஒன்றிய இளைஞரணி நிர்வாகி பெரியநாயகம் போக்சோ வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ஒரு பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்த நிலையில், அந்த பெண்ணின் குழந்தையை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த கொடுஞ்செயலால் அக்குழந்தை கடந்த டிசம்பர் மாதம் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. அதைத் தொடர்ந்து பிரேத பரிசோதனை அறிக்கையை வைத்து போலீசார் நடத்திய விசாரணையில் உண்மை வெளிச்சத்திற்கு வரவே பெரியநாயகத்தை கைது செய்த போலீசார் கிருஷ்ணகிரி மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தர்மபுரி மாவட்டம் சிறையில் அடைத்தனர். தமிழ்நாட்டையே அதிர வைத்த இச்சம்பவம் சம்பவத்திற்கு அதிமுக உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதன்படி, திமுக ஆட்சியில் குழந்தைகளுக்குக் கூட பாதுகாப்பு இல்லை; அத்தனை குற்றவாளிகளுக்கும் திமுக புகலிடம் தருவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள கண்டன வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, “கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்சட்டி அருகில் கவுண்டன் கொட்டாய் கிராமத்தில் இரண்டரை வயது குழந்தையை கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்ததாக திமுக இளைஞரணி நிர்வாகி பெரியநாயகம் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். தெய்வமாகக் கொண்டாடப்படவேண்டிய குழந்தையை திமுகவைச் சேர்ந்த மனித மிருகம் ஒன்று கொடூரமான முறையில் வேட்டையாடியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த மனித மிருகத்தை தப்பவிடக் கூடாது.

திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், தமிழ்நாடு முழுவதும் பாலியல் வன்கொடுமைகள், கொலைகள், கொள்ளைகள் என அனைத்து வகையான குற்றங்களும் அதிகரித்துவிட்டன. கவுண்டன் கொட்டாய் கிராமத்தில் இரண்டரை வயது குழந்தையை திமுக நிர்வாகி சீரழித்ததைப் போலவே தமிழகத்தில் நடைபெறும் பெரும்பான்மையான குற்றங்களுக்கு திமுக நிர்வாகிகள் தான் காரணமாக உள்ளனர்.

திமுக ஆட்சிக்கு வந்துவிட்டாலே அக்கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கு போதை மருந்து கடத்தல், பாலியல் வன்கொடுமை, கொலை, கொள்ளை உள்ளிட்ட அனைத்துக் குற்றங்களையும் செய்வதற்கு உரிமம் வழங்கப்படும் நிலைதான் நிலவுகிறது. திமுகவினர் குற்றம் செய்தால் சர்வாதிகரியாக மாறுவேன் என்று வீர வசனம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுகவினரின் அனைத்துக் குற்றங்களையும் கண்டுகொள்ளாமல், கைக்கட்டி, வாய்ப்பொத்தி நிற்பதுதான் இத்தகைய குற்றச்செயல்கள் அதிகரிப்பதற்குக் காரணம் ஆகும்.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டம் பெருகியுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் ஆண்டுக்கு 22 இலட்சம் கிலோ கஞ்சா புழக்கத்தில் விடப்படும் அளவுக்கு நிலைமையை சீரழித்ததுதான் திமுக அரசின் சாதனையாகும். திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 54 விழுக்காடும், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 61 விழுக்காடும் அதிகரித்திருக்கின்றன. இந்த அவலங்கள் அனைத்திற்கும் திமுக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.

பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத இடம் நரகத்திற்குச் சமமானது. திமுகவின் ஐந்தாண்டுகால ஆட்சியில் தமிழ்நாடு நரகமாக மாறியிருக்கிறது. இதற்கெல்லாம் காரணமான திமுக அரசுக்கு வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் மறக்க முடியாத பாடத்தைப் புகட்டுவார்கள்.”

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

[youtube-feed feed=1]