டெல்லி: ஏர்செல்-மேக்சிஸ்., ஐ.என்.எக்ஸ் மீடியா பணமோசடி வழக்கில் மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான  ப. சிதம்பரம் மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி  கிடைத்துள்ளது, அமலாக்கத்துறை அறிவித்து உள்ளது.

 ப. சிதம்பரத்திற்கு எதிராக வழக்குத் தொடர இரண்டு ஊழல் வழக்குகளில் அமலாக்கத் துறை அனுமதி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி, ஐ.என்.எக்ஸ் மீடியா மற்றும் ஏர்செல்-மேக்ஸிஸ் ஒப்பந்த வழக்குகளில் வழக்குத் தொடர பிப்ரவரி 10 அன்று அனுமதி வழங்கப்பட்டது என அமலாக்கத்துறை தெரிவித்து உள்ளது.

முன்னாள் நிதியமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான  ப. சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மீது நிலுவையில் உள்ள ஏர்செல் மேக்சிஸ் பணமோசடி வழக்கை விசாரணை செய்ய, பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவிடம் இருந்து முறையான அனுமதி கிடைத்துள்ளதாக அமலாக்கத்துறை டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

2006-07 ஆம் ஆண்டில் ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தபோது, விதிகளை மீறி வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் மூலம் ஐஎன்எக்ஸ் மீடியா மற்றும் ஏர்செல்-மேக்சிஸ் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. சட்டப்படி, 600 கோடி ரூபாய்க்கு மேலான முதலீடுகளுக்கு மத்திய அமைச்சரவையின் பொருளாதார விவகாரங்களுக்கான குழு தான் அனுமதி அளிக்க வேண்டும். ஆனால், சுமார் 3,565 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டிற்கு, சிதம்பரம் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி முறைகேடாக அனுமதி அளித்ததாக அமலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ளது. இதற்குப் பிரதிபலனாக அவரது மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான நிறுவனங்கள் மூலம் 1.16 கோடி ரூபாய் லஞ்சம் பெறப்பட்டதாக அமலாக்கத்துறை கூறுகிறது.

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழும் ஒரு பொது ஊழியர் மீது வழக்குத் தொடர வேண்டுமென்றால், முன் அனுமதி பெறுவது அவசியம் என்று உச்சநீதி மன்றம் கடந்த 2024 நவம்பரில் உத்தரவிட்டது. அந்த உத்தரவைத் தொடர்ந்து, தற்போது அந்த அனுமதி கிடைத்துள்ளதால், வழக்கு விசாரணை அடுத்த கட்டத்திற்கு நகர உள்ளது. 2011 ஆம் ஆண்டு சிபிஐ தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் அமலாக்கத்துறை விசாரணையை தொடங்க உள்ளது. ப. சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் தொடக்கம் முதலே இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து வருகின்றனர். பாஜக தலைமையிலான மத்திய அரசு, அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் தங்களை இலக்கு வைப்பதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது, ​​சட்டவிரோத மனநிறைவுக்காக ஐஎன்எக்ஸ் மீடியாவிற்கு எஃப்ஐபிபி (வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம்) ஒப்புதல் வழங்கப்பட்டதாகவும், பின்னர் முறைப்படுத்தப்பட்டது என்றும் விசாரணையில் கண்டறியப்பட்டது. ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில், மேக்சிஸ் ஏர்செல்லில் 800 மில்லியன் டாலர் அந்நிய நேரடி முதலீட்டுக்கு சிதம்பரம் எஃப்ஐபிபி ஒப்புதலை வழங்கியதாகவும், இது நிதியமைச்சராக அவரது அனுமதிக்கப்பட்ட அதிகாரங்களுக்கு அப்பாற்பட்டது என்றும் ED தெரிவித்துள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், ஐஎன்எக்ஸ் மீடியா மற்றும் சிதம்பரத்தின் மகன் கார்த்தி உட்பட பிறருக்கு எதிராக சிபிஐ பதிவு செய்த வழக்கின் அடிப்படையில், 2017 இல் பிஎம்எல்ஏவின் கீழ் ED விசாரணையைத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

[youtube-feed feed=1]