சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று டாஸ்மாக் ஊழியர்கள், சத்துணவு ஊழியர்கள் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். போராட்டத்தில் ஈடுபடுபவர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என தலைமை செயலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
டாஸ்மாக் பணியாளர்கள் இன்று குடும்பத்துடன் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவுள்ளதாக, தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் (ஏஐடியுசி) தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 4,829 டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்கி வருகின்றன, இந்த கடைகளில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொகுப்பூதிய, ஒப்பந்தப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

‘தொகுப்பூதிய, ஒப்பந்தப் பணியாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்து, அவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பணி நிறைவுக்கு பிறகு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என கடந்த 15 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர். மேலும், காலி மதுபாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டத்தை டாஸ்மாக் கடை பணியாளர்களை கொண்டு செயல்படுத்தாமல் மாற்று திட்டத்தை ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக, டாஸ்மாக் நிர்வாகம், அமைச்சர் என பலமுறை பேச்சுவார்த்தை நடைபெற்றும் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கவில்லை என டாஸ்மாக் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், இன்று (3-ம் தேதி) சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் அலுவலகத்தில் இருந்து பேரணியாக சென்று, தலைமைச் செயலகம் முன் குடும்பத்துடன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக, தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் (ஏஐடியுசி) தெரிவித்துள்ளது.
இந்த போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் மற்றும் முன்னாள் மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
அதுபோல, இன்றுமுதல் சத்துணவு ஊழியர்கள் காலவரையற்ற போராட்டத்தை அறிவித்து உள்ளனர்.
சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம், குடும்பப் பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம், பணிக்கொடை அமைப்பாளர்களுக்கு ரூ.5 லட்சம், சமையல் உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏற்கனவே ஜனவரி 20-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்தனர். இதையடுத்து, சத்துணவு ஊழியர்களுடன் சென்னை தலைமைச் செயலகத்தில் சமூக நலத் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால், திட்டமிட்டபடி தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, சத்துணவு ஊழியர்கள் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் திடீரென சாலை மறியல் செய்ய முயன்றனர். இதைத் தொடர்ந்து போலீசார் அவர்களைத் தடுத்தனர். இதனால், போலீசாருக்கும் சத்துணவு ஊழியர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதை அடுத்து, மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற நூற்றுக்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இதேபோல் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து சத்துணவு ஊழியர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இநத நிலையில், இன்றுமுதல் மீண்டும் சத்துணவு ஊழியர்கள் காலவரையற்ற போராட்டத்தை அறிவித்து உள்ளனர். இந்த போராட்டத்தில், சத்துணவுத்துறையில் பணியாற்றி வரும் சமையல் உதவியாளர்கள் என, 80,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இத்துறையில், பல ஆண்டுகளாக, 40 சதவீத காலிப்பணி யிடங்கள் உள்ளதால், பணிச்சுமையுடன் பணியாற்றுகின்றனர். அவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
[youtube-feed feed=1]