சென்னை: சென்னையில் இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், மதிய வேளையில், மிதமான குளிர்காற்றுடன் மழை பெய்தது. இது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், இன்று சென்னை உள்பட 6 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் கடந்த சில நாள்களாக சிலுசிலுவென குளிர்ந்த காற்றும், காலை உறைபனியும் மனதிற்கு இதமான காலநிலை நிலவி வருகின்றது. இதனால் மக்கள் அதிகாலையில் வெளியே தலைகாட்டாமல், நடைபயிற்சிக்கு செல்லும் பூங்காங்கள், சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. பல பகுதிகளில் அதிகாலையிலேயே டீக்கடைகளில் மக்கள் கூட்டம் காணப்படுகிறது.
இந்த நிலையில், இன்று சென்னையின் பிற பகுதிகளில் காலை முதல் வானம் மேகமூட்டமாக இருந்து வரந்த நிலையில், மதிய வேளையில் திடீரென மிதமான மழை பெய்தது. சென்னையின் பல பகுதிகள் உள்பட புறநகர்ப் பகுதிகளில் லேசான தூரல் பெய்து வந்த நிலையில், ஒருசில இடங்களில் அதாவது சென்னை சென்ட்ரல், பெரியமேடு, புரசைவாக்கம், தியாகராஜ நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.
இதுதொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்று ஜன. 23 (வெள்ளிக்கிழமை) சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
நாளை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது. சென்னையில் வெப்பநிலை தமிழகத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பைவிடக் குறைவாக இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.
[youtube-feed feed=1]