சென்னை: தமிழ்நாட்டில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாகா, புதிய நீதிக் கட்சி இணைந்துள்ள நிலையில், இக்கட்சிகள் தனிச் சின்னத்தில் போட்டியிட இருப்பதாக அறிவித்து உள்ளது.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி, நாளை பிரதமர் மோடி தலைமையில் பிரமாண்டமான பொதுக்கூட்டம் மதுராந்தகம் பகுதியில் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக கூட்டணியை உறுதி செய்ய, மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் சென்னையில் முகாமிட்டு,  கட்சி தலைவர்களை சந்தித்து கூட்டணியில்  சேர்த்து வருகிறார்.

தற்போது கூட்டணியில் அதிமுக, பாஜக, பாமக (அன்புமணி), அமமுக இணைந்துள்ள நிலையில் இன்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசனுடன் சந்திப்பு மேற்கொண்டார்.இந்த சந்திப்பில் இருவரும் கூட்டணியை உறுதிசெய்த நிலையில் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றதாகத் தெரிகிறது.

இதைத்தொடர்ந்து, புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகமும் இன்று பியூஷ் கோயலைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்த கட்சியும் ஏற்கெனவே என்டிஏ கூட்டணியில் உள்ளது.

பின்னர்  கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த பியூஷ் கோயல், ஜி.கே. வாசன், ஏ.சி. சண்முகம் ஆகியோர் கூறியதாவது, பியூஸ் கோயல்  பேசுகையில், “பிகாரில் காங்கிரஸ் – ஆர்ஜேடி கூட்டணியை மக்கள் நிராகரித்துவிட்டார்கள். காங்கிரஸுக்கு தலைமைத்துவம் இல்லை. வரும் தேர்தலில் காங்கிரஸ் காலாவதியாகும். சமூகத்தை பிளவுபடுத்தும் தமிழக மக்களை புண்படுத்தும் உதயநிதியின் கருத்துகள் மக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன.

தமிழ் மொழியை தமிழ் மக்களை தமிழ் கலாசாரத்தை திமுகவினர் தொடர்ந்து விமர்சிக்கின்றனர். திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும். திமுக – காங்கிரஸ் கூட்டணி படுதோல்வி அடையும். தேசிய விரோத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம். என்டிஏ கூட்டணி அரசு அமைந்தவுடன் தமிழ்நாட்டுக்கு நல்ல ஆட்சியை வளர்ச்சிமிகுந்த ஆட்சியை கொடுப்போம். எங்கள் ஆட்சி அனைத்து மக்களுக்குமான ஆட்சியாக இருக்கும்” என்றார்.

தொடர்ந்த,  ஜி.கே. வாசன் பேசுகையில், “மக்கள் விரோத கூட்டணியை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும். ஒத்த கருத்துடையவர்கள் அனைவரும் என்டிஏ கூட்டணியில் இணைய வேண்டும் என்றவர், இந்த தேர்தலில் தமாக தனி சின்னத்தில்  போட்டியிடும்” என்றார்.

அதுபோல நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகமும் தனிச்சின்னத்தில் போட்டியிடுவோம் என்றார்.

ஆட்சியில் பங்கு உண்டா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த பியூஷ் கோயல், “நாங்கள் ஒரே குடும்பம்போல செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம். எங்களுடைய குடும்பத்தில் கலந்தாலோசித்து நாங்கள் முடிவெடுத்துக்கொள்வோம்” என்றார்.

[youtube-feed feed=1]