சென்னை: பிரதமர் மோடி 100 தடவை தமிழகம் வந்தாலும்  பயன் இல்லை என்று கூறிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை, தேசிய ஜனநாயக கூட்டணி ஒரு   மூழ்கும் கப்பல் என்று விமர்சித்தார்.

2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் தகதகவென கனன்றுகொண்டிருக்கிறது. சிறிய கட்சிகளை தங்கள் பக்கம் இழுப்பதில் திமுக, அதிமுக கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இவர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில், புதிதாக கட்சியை தொடங்கிய விஜய் கட்சியான தவெகவும், பல தலைவர்களை இழுத்து வருகிறது.

இதற்கு மத்தியில், நேற்று (ஜனவரி 21) டிடிவி தினகரனின் அமமுக தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தது. இவர், கடந்த 2025ம்  ஆண்டு செப்டம்பர் மாதம் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிய நிலையில், நேற்று மீண்டும் என்டிஏ கூட்டணியில் இணைந்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளாமல் கூட்டணியை விட்டு வெளியேறிய டிடிவி இன்று மீண்டும் அதிமுக கூட்டணியில் ஐக்கியமானது விமர்சனங்களை ஏற்படுத்தியது.

இந்த சலசலப்புக்க மத்தியில்,  தேசிய ஜனநாயக கூட்டணியில்டிடிவி தினகரன்  இணைந்துள்ளதை எடப்பாடி பழனிசாமி வரவேற்றார். இதற்கு டிடிவி  நன்றி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய  மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர், செல்வபெருந்தகை, ”தேசிய ஜனநாயக கூட்டணி இயற்கைக்கு முரணான கூட்டணி. தமிழக மக்களால் நிராகரிக்கப்பட்ட கூட்டணி. ஒருபோதும் தமிழக மக்கள் அந்த கூட்டணியை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

அந்த கூட்டணியில் இணைந்துள்ள அமமுக தலைவர் நேற்று வரை துரோகி என்றும் உலகத்தில் துரோகிக்கு ஒரு பட்டம் கொடுக்க வேண்டுமானால் அவருக்கு கொடுக்கலாம் என பேசியிருக்கிறார். இனி எப்படி அவரோடு களம் காணப்போகிறார்? அவரோடு மேடையேற போகிறார்? வாக்கு கேட்க போகிறார்? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்ந்தவுடன் அவருடைய பெயரை சொல்வதற்கே தவிர்க்கிறார்.

ஆகவே இந்த கூட்டணி தமிழக மக்களால் நிராகரிக்கப்பட்ட கூட்டணி. மோடி ஒருமுறை அல்ல; 100 முறை வந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

தேசிய கல்விக்கொள்கையின் மும்மொழிக் கொள்கையில் கையெழுத்திட்டால்தான் தமிழகத்துக்கு கல்வி நிதியான 3,400 கோடி ரூபாய் கொடுப்போம் என அடம்பிடிக்கிற பாஜக, தமிழக மக்களை மண்டியிட வைப்போம் என்று சொல்லும் பாஜக, எப்படி அதிமுகவுடன் சேர்ந்து தமிழக மக்களுக்காக வாக்கு கேட்பார்கள்?

மக்களும் எப்படி வாக்களிப்பார்கள்? என்ற கேள்வி பெரிய அளவில் எழுந்துள்ளது. ஓடிசா, பீகர் போனால் தமிழர்களை குறை சொல்லும் பிரதமர் மோடி, தன்னை எப்படி தமிழக மக்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்? என நினைக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கூறினார்.

[youtube-feed feed=1]