சென்னை: சர்வோம் ஏஐ நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறினார்.
இதுதொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா; உலகமே செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தை நோக்கி செல்கிறது. ரூ.10,000 கோடி முதலீட்டில் 1,000 பேருக்கு உயிர் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகள் வழங்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது ஒரு செயற்கை நுண்ணறிவு பூங்கா அல்லது கிராமம் போன்று உருவாகும். ஏ.ஐ. பூங்கா மூலம் உயர் தொழில்நுட்ப தரவு மையங்கள் கிடைக்கும். திட்டத்திற்காக பெரிய தரவு மையம் அமைக்கப்பட உள்ளது; அரசு துறைகளின் எல்லா தரவுகளும் அதில் இருக்கும். சென்னை ஐஐடிக்கு அருகில் தரவு மையத்தை அமைக்க நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. ரூ.10,000 கோடி முதலீட்டில் பெரும்பகுதி தரவு மையம், ஆராய்ச்சிக்கு செலவழிக்கப்படும். திட்டத்தின் மூலம் உயர் தொழில்நுட்பத் தரவு மையங்கள் கிடைக்கும்.
தமிழ்நாடு முன்னோடி என்பதால் இந்த முதலீட்டின் மூலம் ஏஐ துறையில் மேலும் புதிய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் துவங்கப்படும். ஏஐ தொழில்நுட்பத் துறையில் இது மிகப்பெரிய வளர்ச்சியை அளிக்கும். நம் ஊரில் ஆராய்ச்சி செய்யப்பட்டு உருவாக்கப்பட்ட ஏஐ தொழில்நுட்பம்தான் இது என்று கூறினார்.
முன்னதாக, சர்வம் AI, IndiaAI மிஷனின் கீழ் உள்நாட்டு அடிப்படை மாதிரியை உருவாக்கத் இந்திய அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் 2025ம் ஆண்டு ஏப்ரல் 26ந்தேதி கையெழுத்தானது. இதைத்தொடர்ந்து, ‘ அனைவருக்கும் செயற்கை நுண்ணறிவு: உலகளாவிய தாக்கம்’ குறித்த உச்சி மாநாடு இந்தியாவில் 2026 பிப்ரவரியில் நடைபெறவுள்ளது.
இதையொட்டி, ஜனவரி 8ந்தேதி நடை பெற்ற இந்திய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், அவதார், பார்த்ஜென், ஃப்ராக்டல், கான், ஜென்லூப், இன்டெலிஹெல்த், சர்வம், டெக் மஹிந்திரா, ஜென்டீக் உட்பட பல ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் சிஇஓ.க்கள் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உடன் மத்திய மின்னனு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இணையமைச்சர் ஜிதின் பிரசாதா ஆகியோரும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், செயற்கை நுண்ணறிவு தொழில்முனைவோர் ஆகியோர் நாட்டின் எதிர்காலத்தை இணைந்து உருவாக்குபவர்கள். சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதில் செயற்கை நுண்ணறிவு முக்கியமானதாக உள்ளது. ஏஐ உச்சி மாநாட்டை இந்தியா அடுத்த மாதம் நடத்துவதன் மூலம், தொழில்நுட்ப துறையில் இந்தியா முக்கிய பங்காற்றுகிறது. செயற்கை நுண்ணறிவை மேம்படுத்தி மாற்றத்தை கொண்டுவர இந்தியா முயற்சிகள் எடுக்கிறது. புதுமைகளை கண்டுபிடித்து அவற்றை மிகப் பெரியளவில் அமல்படுத்தும் திறன் நம் நாட்டில் அதிகமாக உள்ளது. உலகுக்கு தனிச்சிறப்பான ஏஐ மாடலை இந்தியா அளிக்க வேண்டும். உலகுக்காக இந்தியாவில் தயாரிப்பதை அது பிரதிபலிக்க வேண்டும் என கூறியது குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1]