அன்புமணி அணிந்துள்ள கோட் யார் கொடுத்தது? ஏசி கார் யார் கொடுத்தது? என கேள்வி எழுப்பியவர், தம்பி அன்புமணிக்கு அதிகாரம் வேண்டும் என்றால் புதிய கட்சியை தொடங்கிக் கொள்ளட்டும் என ராமதாஸ் மகளும், அன்புமணியும் சகோதரி மற்றும் சம்பந்தி ஸ்ரீ காந்தி காட்டமாக பேசியுள்ளார்.

சேலத்தில் பாமகவின் பொதுக்குழு கூட்டம் இன்று(டிச. 29) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பாமக தலைவராக ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளதுடன் கூட்டணி முடிவு, வேட்பாளர்கள் தேர்வுக்கு ராமதாஸுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் பேசிய ராமதாசின் மகளான ஸ்ரீகாந்தி, “துரோகத்தை வீழ்த்துவோம், ராமதாஸின் கரத்தை வலுப்படுத்துவோம், 2025ல் பெரும் பலத்துடன் கோட்டைக்குள் நுழைவோம்” என வாசிக்க, அதை நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் கூறி, அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இதையடுத்து, கூட்டத்தில் பேசிய ஸ்ரீகாந்தி, “பாமகவை வளர்த்தெடுத்த ராமதாஸிடம் இருந்து கட்சியை அபகரித்துவிட்டு யாருக்காக நீங்கள் (அன்புமணி) போராடப் போகிறீர்கள்? ராமதாஸை கேள்வி கேட்க உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? மருத்துவர் பட்டமும் எம்பி, அமைச்சர் பதவிகளும் அன்புமணிக்கு ராமதாஸ் போட்ட பிச்சை என கடுமையாக விமர்சித்தார்.
தொடர்ந்து பேசியவர், தம்பி அன்புமணி தலைவருக்கு (ராமதாசுக்கு) செய்தது பச்சைத் துரோகம் என்றவர்ர், தலைவரை கண்டுகொள்ளாமல் பாமகவுக்கு இனி நான்தான் தலைவர் என்று கூறினால் நாம் ஏற்றுக்கொள்ள முடியுமா? என கூட்டத்தினரை பார்த்து கேள்வி எழுப்பினார்.
அன்புமணிக்கு அதிகாரம் வேண்டுமெனால் தனியாகக் கட்சி தொடங்கட்டும், அதை விட்டுவிட்டு, தலைவரிடம் இருந்து கட்சியை அபகரிப்பது எந்த வகையில் நியாயம் என்றவர், இது ராமதாஸ் வளர்த்தெடுத்த கட்சி. அவர்தான், பாமக எனும் கோட்டைக்கு ராஜா. இதற்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது என என கடுமையாக சாடினார்.
மேலும், திமுக கைக்கூலி என்று எங்களை விமர்சித்தவர்கள் எல்லாம் ஆர்எஸ்எஸ் அடிமைகள் என்றவர், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் எம்எல்ஏக்களின் பலத்துடன் நாம் சட்டப்பேரவைக்குள் நுழைவோம். பேரவைத் தேர்தலில் பாமக யாருடன் கூட்டணி, எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து ராமதாஸ் ஏற்கெனவே முடிவெடுத்துவிட்டார். ராமதாஸின் ஆட்டத்தை இனிமேல்தான் பார்க்கப் போகிறீர்கள். இனிமேல் குறுக்கே பேச யாரும் இல்லை, காலை வாரிவிடவும் யாரும் இல்லை” என்று பேசினார்.
அதேபோல கூட்டத்தில் பேசிய ஜி.கே. மணி, “அன்புமணி இனி அரசியல் செய்ய முடியாது அவர் அரசியலைவிட்டு வேறு வேலையைப் பார்க்கலாம். பாமக சாதாரணமாக உருவான கட்சி அல்ல. கட்சியை இனி யாராலும் அபகரிக்க முடியாது” என்று பேசினார்.
முன்னதாக, பசுமைத் தாயகம் தலைவர் பொறுப்பிலிருந்து சௌமியா அன்புமணியை நீக்கிவிட்டு அந்த பொறுப்பை ஸ்ரீகாந்திக்கு வழங்கி அழகு பார்த்த ராமதாஸ், பின்னர், பாமகவின் மகள் ஸ்ரீகாந்தியை பாமகவின் செயல்தலைவராக நியமனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.