மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணியில் தீபம் ஏற்ற வலியுறுத்தி திருப்பரங்குன்றத்தில் டிச.13ந்தேதி (சனிக்கிழமை) உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உயர் நீதிமன்றம் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி உண்ணாவிரத போராட்டத்தில் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என கூறி உள்ளது.

மதுரை அருகே உள்ள திருப்பரங்குன்றம் மலையில், கார்த்திகை தீபம் ஏற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும், அதை செயல்படுத்த திமுக அரசு தடை விதித்தது. இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பான வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நடைபெற்று வருகிறது. மேலும் உச்சநீதிமன்றத்திலும் விசாரணைக்கு வர உள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் எனவும் தற்போது ஏற்றக்கூடிய இடம் இறந்தவர்களுக்காக மோட்ச தீபம் ஏற்றப்படும் இடம் எனவும் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் 30க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களை ஆட்சியரிடம் அளித்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபமேற்ற வலியுறுத்தி டிச.13-ல் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை.
இதையடுத்து, உண்ணாவிரத போராட்டம் தொடர்பாக மதுரை திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்த பிரபு, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடுத்துள்ளார். அவரது மனுவில் திருப்பரங்குன்றம் முருகன் கோயில் 2000 ஆண்டுகள் பழமையானது. 1926-ல் உரிமையியல் பிரச்சினை எழும் வரை தீபத்தூணில் தான் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டுள்ளது. அதன்படியே இந்த ஆண்டு தீபத்தூணில் தீபம் ஏற்ற தனி நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவு நிறைவேற்றப்படவில்லை.

உயர் நீதிமன்ற உத்தரவுபடி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணிலும் கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி திருப்பரங்குன்றத்தில் அமைதியான முறையில் உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு காவல்துறையிடம் அனுமதி கோரப்பட்டது. சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் எனக் கூறி அனுமதி வழங்க காவல்துறை மறுத்துவிட்டது.
எனவே டிச.13-ல் காலை 9மணி முதல் மாலை 5 மணி வரை திருப்பரங்குன்றம் மயில் மண்டபம் அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த மனுமீதான விசாரணை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.ஸ்ரீமதி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில், மனுதாரர் கோரும் இடத்திற்கு பதிலாக மாற்று இடத்தில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி வழங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்க உண்ணாவிரதம் இருக்கும் தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனுதாரர் கோரும் இடத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தலாம் என அனுமதி வழங்கினார்.
அனுமதிக்கப்பட்ட சன்னதி தெருவில் காலை 9 முதல் 5 மணி வரை உண்ணாவிரத இருக்க நீதிபதி ஸ்ரீமதி உத்தரவிட்டு உள்ளார்.. இந்த உண்ணாவிரதத்தில், 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்றும், உண்ணாவிரதப் போராட்டத்தில் தனி நபர்களையோ, அரசியல் கட்சியினரையோ தாக்கும் வகையில் பேசக்கூடாது என்றும் நிபந்தனைகளை விதித்தார்.
[youtube-feed feed=1]