சென்னை: அம்பேத்கர்  நினைவு நாளையொட்டி,   நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.

  இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றிய சட்ட மேதை அம்பேத்கரின் 70 ஆவது நினைவு நாள் இன்று (டிச.6) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினார்.

நாடாளுமன்றத்தில் உள்ள அம்பேத்கரின் சிலைக்கு கீழே வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப் படத்திற்கு குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாலையில் விஐபி அமர்வில் கலந்து கொண்ட பல பிரமுகர்கள் மலர் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இது குறித்து அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,  “டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரை நினைவுகூர்வோம். அவரது தொலைநோக்கு தலைமைத்துவமும் நீதி, சமத்துவம் மற்றும் அரசியலமைப்பு மீதான அசைக்க முடியாத அர்ப்பணிப்பும் நமது தேசிய பயணத்தை தொடர்ந்து வழிநடத்துகின்றது. மனித கண்ணியத்தை நிலைநிறுத்தவும், ஜனநாயக விழுமியங்களை வலுப்படுத்தவும் தலைமுறைகளை ஊக்குவித்தவர்.

ஒரு வளர்ந்த இந்தியாவை கட்டியெழுப்ப நாம் பாடுபடும் போது அவரது லட்சியங்கள் நமது பாதையை ஒளிரச் செய்யட்டும்” என கூறியுள்ளார்.