சென்னை: தமிழ்நாட்டை மிரட்டி வந்த டிட்வா புயல் வலுவிழந்த நிலையில், குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டமாக சென்னை அருகே நிலைகொண்டுள்ளதால், சென்னை உள்பட சுற்றுவட்டார மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேஙகி இருப்பதுடன், பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை 2வது நாளாக விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. திருவள்ளுர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவான ‘டிட்வா‘ புயல், தமிழ்நாடு நோக்கி நகர்ந்தது. மேலும், தமிழ்நாட்டை நெருங்கம்போது, அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, பின்னர் சென்னைக்கு அருகே வந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுவிழந்து, தற்போது சென்னைக்கு 60 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது. இது 12 மணி நேரம் வரை அதே நிலையில் இருந்து, பின்னர் மேலும் வலுவிழந்து, சென்னை-புதுச்சேரி இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக கனமழை பெய்து வருகிறது. இன்று சென்னை 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், மழையும் பெய்து வருகிறது. இந்த நிலையில், நாளை 3 மாவட்டங்களுக்கும் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில், சென்னை, திருவள்ளுர் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், நாளையும் மழை தொடரும் என கணிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவிட்டுள்ளார். இதனிடையே, செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் திருவள்ளூர் மாவட்டத்துக்கு பள்ளி கல்லூரிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.