சென்னை:  மெட்ரோ ரயில் பணிக்காக சிஎம்ஆர்எல்  கோரிக்கையை ஏற்று வேளச்சேரி மேம்பாலம் கட்டும் பணி  தற்காலிகமாக தள்ளி வைக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது.

வேளச்சேரி சாலை சந்திப்பு (பீனிக்ஸ் மால் அருகே) மற்றும் ஐந்து பர்லாங் ரோடு சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, ஐந்து பர்லாங் ரோடு சந்திப்பில் இருந்து குருநானக் கல்லூரி சந்திப்பு வரையிலான வேளச்சேரி சாலையில் ரூ.310 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் கட்ட சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்கான டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்க தயாராக இருந்த நிலையில், அந்த பகுதியில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருவதால், பாலம் கட்டும் பணியை சில காலம் தள்ளி வைக்க மெட்ரோ ரயில் நிர்வாகமான சிஎம்ஆர்எல் சென்னை மாநகராட்சியிடம் கோரிக்கை வைத்தது.

இதை ஏற்று பாலம் கட்டுமான தொடங்குவது சில காலம் தள்ளி வைக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். அதன்படி இரு மாதங்கள்  பாலம் கட்டுமான  பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

தாம்பரம் முதல் வேளச்சேரி வரையிலான மெட்ரோ ரயில் திட்டம் (பள்ளிக்கரணை, காமாட்சி மருத்துவமனை, குருநானக் கல்லூரி) வேளச்சேரி மெயின் ரோடு மேம்பாலத்துடன் சுமார் 650 மீட்டர் தொலைவுக்கு ஒன்றாக வருகிறது.  இந்த திட்டத்தின் ஊடே பாலமும் வருவதால், மெட்ரோ ரயில் பணிகள் தாமதப்படும் என்பதால், பாலம் கட்டுமான பணியை தள்ளி வைக்க மெட்ரோ நிறுவனம்  கோரிக்கையை ஏற்ற மாநகராட்சி, பாலம் கட்டுமான பணியை ஒத்தி வைத்துள்ளடன்,  மெட்ரோ ரயிலின் வடிவமைப்பை மெட்ரோ ரயில் நிர்வாகம் சமர்ப்பிக்க வேண்டும் என்று  கேட்டுக்கொண்டுள்ளது.

இதுதொடர்பாக கூறிய அதிகாரிகள்,  வேளச்சேரி பகுதியில், முதலில் அடித்தளமும் மேம்பாலமும் கட்டப்பட்ட பிறகு, அதற்கு மேலே மெட்ரோ பாதை அமைக்கலாம் என்று சென்னை மாநகராட்சி பரிந்துரைத்துள்ளது. டிசம்பர் மாதத்துக்குள் பேச்சுவார்த்தை முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் பணியை தொடங்கும் நிறுவனத்திற்கு தேவையான கூடுதல் நிதி வழங்கப்படும். ஜனவரி மாதம் முதல் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு தெரிவித்துள்ளனர்.