சென்னை: மத்தியஅரசின் புதிய தொழிலாளர் சட்டங்களை எதிர்த்து வரும் 26ஆம் தேதி நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம்  நடைபெறும் என  தொழிற்சங்கங்கள் கூட்டாக அறிவிப்பு  வெளியிட்டு உள்ளது.

மத்திய  அரசு அமல்படுத்தியுள்ள 4 புதிய தொழிலாளர் சட்ட தொகுப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நவ.26ஆம் தேதி நாடு தழுவிய பொது வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என மத்திய தொழிற்சங்கங்கள் கூட்டாக அறிவித்துள்ளன.

இதுதொடர்பாக அய்என்டியுசி, ஏஅய்சிடியுசி, எச்எம்எஸ், சிஅய்டியு,தொமுச உள்பட 10 மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஏற்கெனவே நடைமுறையில் இருந்த 29 தொழிலாளர் நலச்சட்டங்களை நீக்கிவிட்டு அவற்றுக்கு பதிலாக புதிதாக 4 தொழிலாளர் சட்ட தொகுப்புகளை ஒன்றிய அரசு உருவாக்கி அவற்றை நவ.21 முதல் அமல்படுத்தியுள்ளது.

தொழிலாளர் விரோத, முதலாளிகளுக்கு ஆதரவான இந்த சட்டங்களை தன்னிச்சையாக நடைமுறைப்படுத்தியிருப்பதற்கு மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழுசார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

நான்கு தொழிலாளர் சட்ட தொகுப்புகளும் நவ. 21 முதல் அமல்படுத்தப்படும் என ஜனநாயக விரோத, தன்னிச்சையான அறிவிக்கை வெளியிட்டது, அனைத்து ஜனநாயக நெறிமுறைகளையும் மீறும் செயல். இது தொழிலாளர் நலன்களை முற்றிலும் சிதைத்துள்ளது. ஏற்கெனவே உள்ள 29 தொழிலாளர்நலச்சட்டங்களை நீக்கிவிட்டுபுதிதாக 4 தொழிலாளர் சட்டங்களை இயற்றும்போது தொடக்க நிலையிலேயே தொழிற்சங்கங்களும், தொழிலாளர் நல கூட்டமைப்புகளும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன.

கடும் எதிர்ப்பு இருந்த நிலையில் பீகார் சட்டப்பேரவை தேர்தல் வெற்றியை தொடர்ந்து 4 தொழிலாளர் சட்டத் தொகுப்புகளையும் ஒன்றிய அரசு திடீரென அமல்படுத்தியுள்ளது. இவை உழைக்கும் வர்க்கத்தினரின் நலன்களுக்கு முற்றிலும் எதிரானவை. இந்தச் சட்டத்தொகுப்புகளை தொழிலாளர்களின் வாழ்வாதாரங்களுக்கு எதிரான இனரீதியிலான தாக்குதலாகக் கருதுகிறோம்.

பொது வேலை நிறுத்தம்

இவை தொழிலாளர்களை அடிமையாக்குவதுடன் அவர்களின் உரிமைகளை முற்றிலும் பறிக்கும். புதிய சட்ட தொகுப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தொழிற்சங்கங்கள் மற்றும் தொழில் கூட்டமைப்புகள் சார்பில் நவ.26ஆம் தேதி நாடு தழுவிய பொது வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது.

தொழிலாளர் விரோத சட்டத் தொகுப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தொழிலாளர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்ற வேண்டும். அதோடு,  வாயிற்கூட்டம், தெருமுனைக் கூட்டம்என எதிர்ப்பு நடவடிக்கை பணிகளில் ஈடுபட வேண்டும். இந்த நான்கு சட்டத்தொகுப்புகள் திரும்பப் பெறப்படும்வரை உழைக்கும் மக்கள் வலிமையுடன் போராடுவார்கள் என்ற எச்சரிக்கையை ஒன்றிய அரசுக்கு விடுக்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் நவம்பர் 21 (2025) முதல் புதிய தொழிலாளர் சட்டங்கள் அமலுக்கு வந்துள்ளன.

இந்த சட்டங்கள்  பல்வேறு துறைகளில் தொழிலாளர் நலனை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு மிகப்பெரிய நடவடிக்கையாக, இந்தியாவின் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட நான்கு புதிய தொழிலாளர்கள் சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இது தொழிலாளர் நலனுக்காக, பிரதமர் மோடி மேற்கொண்ட மிகப்பெரிய நடவடிக்கை என கூறப்படுகிறது. ஆனால் பல தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

நான்கு புதிய சட்டங்களால் நன்மைகள் என்ன?

வேலைவாய்ப்பு முறைப்படுத்தல்

அனைத்து தொழிலாளர்களுக்கும் கட்டாய நியமனக் கடிதங்கள்.

எழுத்துப்பூர்வ சான்று வெளிப்படைத்தன்மை

வேலைப் பாதுகாப்பு மற்றும் நிலையான வேலைவாய்ப்பை உறுதி செய்யும்.

சஅனைத்து தொழிலாளர்களும் சமூகப் பாதுகாப்பு காப்பீட்டைப் பெறுவார்கள்.

அனைத்து தொழிலாளர்களுக்கும் PF, ESIC, காப்பீடு மற்றும் பிற சமூக பாதுகாப்பு சலுகைகள் கிடைக்கும்

அனைத்து தொழிலாளர்களும் சட்டப்பூர்வ குறைந்தபட்ச ஊதியத்தைப் பெற வேண்டும் .

சரியான நேரத்தில் ஊதியமும் நிதிப் பாதுகாப்பை உறுதி செய்யும். மேலும் தொழிலாளர்களுக்காக பல்வேறு நன்மைகள் தரும் வகையில் சட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது.

வரலாற்று சிறப்புமிக்க நாள்

இது தொடர்பாக, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இன்று எனது உழைக்கும் சகோதர, சகோதரிகளுக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள். நமது அரசு தொழிலாளர்கள் நலனுக்காக நான்கு புதிய சட்டங்களை செயல்படுத்தியுள்ளது. சுதந்திரத்திற்குப் பிறகு தொழிலாளர்களின் நலனுக்காக மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய சீர்திருத்தம் இது. இது நாட்டின் தொழிலாளர்களுக்கு பெரிதும் அதிகாரம் அளிக்கும். இது விதிமுறைகளுக்கு இணங்குவதை மிகவும் எளிதாக்கும். அதே வேளையில், வணிகம் செய்வதை எளிதாக்குவதையும் ஊக்குவிக்கும்.

இந்த சீர்திருத்தங்கள் எதிர்காலத்தில் நமது தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் மற்றும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும். இது புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவது மட்டுமல்லாமல் உற்பத்தித்திறனையும் அதிகரிக்கும். இது வளர்ந்த இந்தியாவை நோக்கிய நமது பயணத்தை விரைவுபடுத்தும்.

இந்த விதிகள் சமூகப் பாதுகாப்பு, சரியான நேரத்தில் ஊதியம் மற்றும் நமது உழைக்கும் சகோதர சகோதரிகளுக்கு பாதுகாப்பான பணியிடத்தை உறுதி செய்யும். அவை சிறந்த மற்றும் அதிக லாபகரமான வாய்ப்புகளுக்கு வலுவான அடித்தளத்தை அமைக்கும். நமது தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் இளம் சக ஊழியர்கள் அவற்றால் குறிப்பாக பயனடைவார்கள். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

முக்கிய நடவடிக்கை

‘இந்த சீர்திருத்தங்கள் வெறும் சாதாரண மாற்றங்கள் அல்ல, மாறாக தொழிலாளர் நலனுக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுத்த ஒரு முக்கிய நடவடிக்கை’ என மத்திய அமைச்சர் மன்சுக் மண்டவியா தெரிவித்துள்ளார்.