திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலில் வருடாந்திர மண்டல பூஜைகளையொட்டி, நாளை மாலை நடை திறக்கப்படும் என தேவசம் போர்டு அறிவித்துள்ளது. இதையொட்டி, டிரோன்கள் மூலம் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடைபெறும்  மண்டல பூஜை 41 நாட்கள் நடைபெறும். இந்த காலக்கட்டத்தில் நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து அய்யப்பனை தரிசித்து செல்வது வழக்கம். அதன்படி, நடப்பாண்டு மண்டல பூஜைக்கான முன்பதிவு ஏற்கனவே நடெபற்று வந்த நிலையில், அவை முடிவடைந்ததாக கூறப்படுகிறது. . இதுவரை 22 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில்,  நடப்பாணடின் மண்டல கால பூஜைகள் நாளை மறுதினம்(17ம் தேதி முதல்) தொடங்குகிறது. இதை முன்னிட்டு நாளை  மாலை 5 மணிக்கு திறக்கப்படும். நாளை தீபாராதனை மட்டுமே நடைபெறும் வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது.

இதைத்தொடர்ந்து,   புதிய மேல்சாந்திகள் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி நடைபெறும். சபரிமலை மேல்சாந்தியாக பிரசாத்தும், மாளிகைப்புரம் மேல்சாந்தியாக மனு நம்பூதிரியும் கடந்த மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர்.  அவர்கள் நாளை பொறுப்பேற்கிறார்கள்.

இதைய்டுத்து,  கார்த்திகை 1ம் தேதியான நாளை மறுநாள் (17ம் தேதி) முதல் அடுத்த ஒரு வருடத்திற்கு சபரிமலையில் இந்த புதிய மேல்சாந்திகள் தான் முக்கிய பூஜைகளை நடத்துவார்கள்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் வரும் 17ம் தேதி முதல் மண்டல கால பூஜைகள் தொடங்குகின்றன. அன்று முதல் தினமும் 18 மணிநேரம் நடை திறந்திருக்கும். அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு மதியம் 1 மணிக்கு நடை சாத்தப்படும். பின்னர் மாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 11 மணிக்கு நடை சாத்தப்படும். பக்தர்கள் வருகை அதிகரித்தால் இரவு நடை சாத்தப்படும் நேரம் கூட்டப்படும் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கேரள டிஜிபி ரவடா சந்திரசேகர் கூறும்போது,   சபரிமலையில் மண்டல காலத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் நிறைவடைந்து விட்டன. மொத்தம் 6 கட்டங்களாக 18,741 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

நிலக்கல், பம்பை, சன்னிதானம் என மூன்று மண்டலங்களாக பிரித்து தலா ஒரு எஸ்பி தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஏடிஜிபி ஸ்ரீஜித் மேற்பார்வையில் டிஐஜிகளான அஜீதா பேகம், சதீஷ் பினோ மற்றும் பத்தனம்திட்டா, இடுக்கி, கோட்டயம் மாவட்ட எஸ்பிக்களான ஆனந்த், சாபு மேத்யூ, சாகுல் அமீது ஆகியோர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். குற்றவாளிகளை கண்டு பிடிப்பதற்காக ஏஐ கண்காணிப்பு கேமராக்கள் பயன்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.