சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட கண்ணகி நகரில் உள்ள மாநகராட்சி பெண் கவுன்சிலரின் அலுவலகம் மீது மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டு வீசித் தாக்கிய சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கண்ணகி நகர் 8வது குறுக்குத் தெருவில் உள்ளது, சென்னை மாநகராட்சியின் 196வது வார்டு அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலக வளாகத்திலேயே இ-சேவை மையம் மற்றும் இந்த வார்டின் அதிமுக கவுன்சிலரான அஸ்வினி கருணா அலுவலகமும் செயல்பட்டு வருகின்றன.
இநத் பகுதியில் நேற்று சாவு நிகழ்வு நடைபெற்ற நிலையில், அதற்க வந்த சிலர் பாட்டுபாடி டான்ஸ் ஆடி தங்களது துக்கத்தை வெளிப்படுத்திவந்தனர். இந்த சம்பவத்தின்போது, அந்த பகுதிக்கு டூவீலரில் வந்த இருவர், அலுவலகத்தில் கவுன்சிலர் அஸ்வினி கருணா உள்ளாரா என்று கேட்டுள்ளனர். பின்னர், அவர்கள் தாங்கள் கொண்டு வந்த நாட்டு வெடிகுண்டு களை அலுவலகத்தின் மீது வீசிவிட்டு அங்கிருந்து தப்பியோடியதாகக் கூறப்படுகிறது.
இந்த நாட்டு வெடிகுண்டு தாக்குதலில், அலுவலகத்தின் முன்பக்கம் இருந்த டியூப் லைட், மாநகராட்சியின் பெயர்ப் பலகை மற்றும் அலுவலகத்தில் மாட்டியிருந்த தலைவர்களின் புகைப்படங்கள் உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்தன. பலத்த சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்ததால், அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த ஊழியர்களும், இ-சேவை மையத்திற்கு வந்த பொதுமக்களும் பயத்தில் அலறியடித்துக் கொண்டு சிதறி ஓடினர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் உடடினயாக விசாரணையை முடுக்கி விட்டனர். விசாரணையில், கண்ணகி நகர் பகுதியைச் சேர்ந்த முனியா (50) என்பவரின் இறுதி ஊர்வலம் நடைபெற்றுள்ளது. அந்த ஊர்வலம் மாநகராட்சி அலுவலகம் வழியாகச் சென்றபோது, ஊர்வலத்தில் கலந்து கொண்ட நபர்கள் சிலர் அலுவலகத்தின் மீது நாட்டு வெடியை வீசியதாக கூறப்படுகிறது.
மேலும், பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டு வெடியை வீசிய மர்ம நபர்கள் யார், அவர்கள் கவுன்சிலரை குறிவைத்து தாக்க வந்தவர்களா அல்லது இறுதி ஊர்வலத்தில் வந்தவர்களா, என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து, தப்பியோடிய நபர்களைப் பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர்.