சென்னை: பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக அரசு உதவியுடன் இயக்கப்பட்டு வரும், பெண்களுக்கான பிங்க் ஆட்டோக்களை ஆண்கள் ஓட்டினால் பறிமுதல் செய்யப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பெண்களின் பாதுகாப்பிற்காக அறிமுகப்படுத்தப்பட்ட பிங்க் ஆட்டோக்களில் ஆண்கள் பயணித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. விதிமீறும் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதையே சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் உறுதிப்படுத்தி உள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு, கடந்த 2023 ஆம் ஆண்டு, பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், சென்னை மாநகரில் “பிங்க் ஆட்டோ” சேவை தொடங்கப்பட்டது. இந்த ஆட்டோக்கள் பெண்களால் இயக்கப்பட்டு, பெண்களை மட்டுமே ஏற்றிச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டவை. ஆட்டோக்களில் GPS கருவிகள், பதற்ற பொத்தான் (panic button) போன்ற பாதுகாப்பு அம்சங்களும் பொருத்தப்பட்டுள்ளன. பெண்களின் பயணத்தை பாதுகாப்பானதாகவும், நம்பிக்கையானதாகவும் மாற்றுவதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
திட்டம் தொடங்கப்பட்டு ஓராண்டை கடந்தும் , பல “பிங்க் ஆட்டோக்கள்” ஆண்களையும் ஏற்றிச் செல்வதாக புகார்கள் எழுந்தன. இதனால், இத்திட்டத்தின் அடிப்படை நோக்கமே சிதைக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் பெண் பயணிகள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டது. சில சமயங்களில், பிங்க் ஆட்டோ ஓட்டுநர்கள் பெண்களை ஏற்ற மறுத்து, ஆண்களை ஏற்றிச் செல்வதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்த புகார்களைத் தொடர்ந்து, போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தற்போது கடுமையான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளனர். “பிங்க் ஆட்டோக்கள்” பெண்களுக்காக மட்டுமே இயக்கப்பட வேண்டும் என்றும், ஆண்கள் பயணிப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது என்றும் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பிங்க் ஆட்டோக்களை ஆண்கள் ஓட்டினால் பறிமுதல் செய்யப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் பிங்க் ஆட்டோக்களை ஆண்கள் இயக்கிவருவதாக மீண்டும் புகார் வந்த நிலையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிங்க் ஆட்டோக்களை ஆண்கள் ஓட்டினால் ஆர்டிஓ மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கெனவே எச்சரிக்கை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.