ராமநாதபுரம்: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை மற்றும் ஜெயந்திர விழாவையொட்டி, பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்துக்கு ஓ. பன்னீர்செல்வமும் செங்கோட்டையனும் ஒரே காரில் வந்தது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், அது தனக்கு தெரியாது என்றும், அவர்கள்  வந்தால்தான் தெரியும். வந்தால் நான் பதில் சொல்கிறேன் என்றார்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118-ஆவது ஜெயந்தி விழா, 63-ஆவது குருபூஜை விழா கொண்டாடப்பட்டு வருகிறது. 3 நாட்கள் நடைபெறும் இந்த விழா  கடந்த 28-ஆம் தேதி  தொடங்கிய நிலையில், இன்று குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா நடைபெறுகிறது. இதையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி,  பசும்பொன் தேவர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார், அவருடன் அதிமுக நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசயி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி , இன்றைய தினம் 118-வது தேவர் ஜெயந்தி விழாவை விழாவை முன்னிட்டு அதிமுக சார்பாக நானும் எங்கள் மூத்த தலைமைக்கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தேவர் ஐயாவின் நினைவிடத்தில் மலர் தூவி புகழஞ்சலி செலுத்தி உள்ளோம். தேசியத்தையும் தெய்வீகத்தையும் தன் இரு கண்களாகக் கொண்டு வாழ்ந்தவர் தெய்வத் திருமகனார் தேவர் அவர்கள்.

எம்ஜிஆர் முதல்வராக இருந்த காலகட்டத்தில் தேவர் பெருமகனார் ஜெயந்தி விழாவை அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்று அறிவித்தார்.  புரட்சித் தலைவர் எம்ஜிஆர், தேவர் ஐயாவுக்கு புகழ் சேர்க்கும் விதமாக சட்டப்பேரவை வளாகத்தில் முழு உருவப்படத்தை திறந்து வைத்தார்.

புரட்சித் தலைவி ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது சுமார் 13 கிலோ தங்கத்தில் தேவர் நினைவிடத்தில் இருக்கும் அவரது சிலைக்கு தங்கக் கவசம் சாத்தினார்.  மேலும், தேவருக்கு நந்தனத்தில் முழு உருவச் சிலையை நிறுவினார்.

தேவர் பெருமகனார் வாழ்ந்த காலத்தில் தனக்கு சொந்தமான பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை ஏழைகளுக்கும், பட்டியலின மக்களுக்கும் பிரித்துக் கொடுத்து ஏழைகளை வாழவைத்த கொடை வள்ளலாக திகழ்ந்தவர்.

தேவர் திருமகன் தேசிய தலைவராக விளங்கியவர், மக்களுக்காக பாடுபட்டவர். அவருக்கு அவருக்கு மேலும் புகழ் சேர்க்கும் விதமாக அதிமுக சார்பாக அவருக்கு பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சரிடம் கடிதம் கொடுத்திருக்கிறோம்.  தேசத்துகாக பாடுபட்ட அவருக்கு அனைவரும் சேர்ந்து புகழ் சேர்ப்பது பெருமைக்குரியது என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

இதையடுத்து பழனிசாமியிடம், ஓ. பன்னீர்செல்வம், செங்கோட்டையன் ஆகிய இருவரும் ஒரே காரில் வருவதைப் பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு, “தெரியவில்லை… வந்தால்தான் தெரியும். வந்தால் நான் பதில் சொல்கிறேன்” என்றார்.