சென்னை: வங்கக்கடலில் உருவாக்கி உள்ள மொன்தா புயல்  காரணமாக,  சென்னை, திருவள்ளூரில்  இன்று  பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்  வலுவடைந்தது. இது இன்று தீவிர புயலாக மாறி ஆந்திர மாநில கடற்கரையோரம் கரையை கடக்க உள்ளது. இந்த புயலுக்கு தாய்லாந்து நாடு பரிந்துரைத்தபடி ‘மொன்தா ‘ என்று பெயரிடப்பட்டுள்ளது.  தற்போது  மொந்தா புயல் சென்னைக்கு 480 கி.மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இந்த புயல் இன்று ஆந்திராவின் மசிலிப்பட்டிணம் – கலிங்கப்பட்டிணம் இடையே காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது.

இந்த மொன்தா புயல் காரணமாக ஆந்திரா மட்டுமின்றி தமிழ்நாடு, ஒடிசா, பாண்டிச்சேரி ஆகிய இடங்களிலும் மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

இதன் காரணமாக நேற்று முதல் சென்னை, திருவள்ளுர் மாவட்டங்களில்  இடைவிடாலமல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதையடுத்து பாதுகாப்பு  காரணமாக சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு  உள்ளது.

அதன்படி, சென்னை மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். கல்லூரிகள் வழக்கம்போல செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், செங்கல்பட்டு, சென்னை, கடலூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், கன்னியாகுமரி, மதுரை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருச்சி, திருநெல்வேலி மற்றும் விருதுநகர் ஆகிய 21 மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்யும் வாய்ப்பு உள்ளதாகவும்,  ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 90 கி.மீட்டர் முதல் 100 கி.மீட்டர் வரை சூறைக்காற்று வீசும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால், மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றம் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று ஏற்கனவே இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது

புயல் கரையை கடக்கும்போது, 90 முதல் 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்.புயல் காரணமாக பல்வேறு பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும். மேலும் திருவள்ளூர் மாவட்டத்திற்கு இன்று ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.எனவே அங்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டுக்கு இடைப்பட்ட பகுதிகளில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது

.வருகிற நாட்களில் வட தமிழ்நாடு கடல் பகுதிகள் மற்றும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வட தமிழக கடற்கரையோர மாவட்டங்களுக்கு தரைக்காற்று 30 முதல் 35 கி.மீ. வரையில் வீசும். அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும். அதேபோல், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களான நீலகிரி மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் கோவை மாவட்ட புறநகர் மலைப்பகுதிகளில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.

சென்னையில் மொந்தா புயல் பாதிப்பு மழைப்பொழிவில் இருக்கும் என்று ஏற்கனேவ அறிவுறுத்தப்பட்டதால், மாநகராட்சி தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஏற்கனவேற 215 நிவாரண முகாம்கள், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மோட்டார்பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தூய்மை பணியாளர்கள் உள்பட மாநகராட்சியின் அனைத்து தரப்பு பணியாளர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் தொடர்ந்து மழைப்பொழிவு இருந்து வரும் நிலையில் சாலைகளில் தேங்கும் மழைநீரை உடனடியாக அகற்றுவதற்கு ஏதுவாக சாலைகளின் ஓரத்திலே மோட்டார் பம்புகள் பொருத்தப்பட்ட டிராக்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.