சென்னை: தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் தீவிர வாக்காளர் திருத்தம் (எஸ்ஐஆர்) மேற்கொள்ளப்படும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், வாக்குரிமைப் பறிப்பைத் தடுப்போம்! வாக்குத் திருட்டை முறியடிப்போம்! என எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்தபோது, 2வது கட்டமாக தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மேற்கொள்ளப்பட உள்ளதாகவும், வரும் 4ந்தேதி முதல் அதற்கான பணிகள் நடைபெறும் என அறிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக கூட்டணி கட்சிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், காங்கிரஸ், விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், வைகோ, தங்கபாலு, வேல்முருகன், வீரபாண்டியன், பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றனர். இதில், தேர்தல் ஆணைய அறிவிப்புக்கு எதிரான அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து கூட்டணி கட்சிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார்.
இதைத்தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாட்டிலும் SIR: வாக்குரிமைப் பறிப்பைத் தடுப்போம்! வாக்குத் திருட்டை முறியடிப்போம்! தேர்தலுக்கு மிக நெருக்கத்தில், அதுவும் பருவமழைக் காலமான நவம்பர், டிசம்பர் மாதங்களில் #SIR மேற்கொள்வது நடைமுறைச் சவால்கள் நிறைந்தது.

அவசரகதியில் செய்யப்படும் SIR நடவடிக்கை மக்களின் வாக்குரிமையைப் பறித்து, பா.ஜ.க.வுக்குச் சாதகமாகத் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் சதியாக அமைந்துள்ளது. ஏற்கெனவே, பீகாரில் பெண்கள், சிறுபான்மையினர், பட்டியல் – பழங்குடியின மக்கள் உள்ளிட்டோர் அதிக அளவில் வாக்காளர் பட்டியிலில் இருந்து நீக்கப்பட்டதுடன், இந்த நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை இல்லாததும் சேர்ந்து, கடும் ஐயத்தை அனைவரது மனதிலும் எழுப்பியிருக்கிறது.
தமிழ்நாட்டில் அடுத்த வாரம் முதல் SIR மேற்கொள்ளப்படும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், கூட்டணிக் கட்சிகளுடன் கலந்து பேசியிருக்கிறோம். அதனடிப்படையில் வரும் நவம்பர் 2 அன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் அழைத்து, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கக் கூட்டம் நடத்தப்படும்.
மக்களின் வாக்குரிமைதான் ஜனநாயகத்தின் அடிப்படை. அதனைப் பறிக்கத் துணியும் ஜனநாயகப் படுகொலையை எதிர்த்து தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்!
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.