சென்னை: வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கும்வரை தமிழ்நாட்டில் ரோடு ஷோக்கு அனுமதி   வழங்கப்படாது என கரூர் சம்பவம் தொடர்பான வழக்கின் விசாரணையின்போது, உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு  தெரிவித்துள்ளது.

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த நிலையில்,  ‘ கட்சிக் கூட்டங்களுக்கு வழிகாட்டு விதிமுறைகள் வகுக்க உத்தரவிடக்கோரி வழக்கின் விசாரணை இன்று உயர்நீதி மன்றத்தில் தலைமைநீதிபதி அமர்வில் நடைபெற்றது. இந்த விசாரணையின்போதர, காரசார வாதங்கள் நடைபெற்ற நிலையில்,  அரசியல் கட்சிகள் கூட்டம் நடத்துவது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கும்வரை தமிழ்நாட்டில் ரோடு ஷோ நடத்த அனுமதியில்லை என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அரசியல் கட்சிகள் பேரணி மற்றும் பொதுக் கூட்டங்கள் நடத்த வழிகாட்டு விதிமுறைகள் உருவாக்குவது தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த நிலையில் காரசார வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.

விசாரணை தொடங்கியதும், தமிழகத்தில் பொதுக் கூட்டங்கள் நடத்த விதிகள் வகுக்கும் வரை, தமிழகத்தில் எந்தவொரு கட்சிக்கும், சாலைவலம் செல்லவோ, பொதுக் கூட்டம் நடத்தவோ அனுமதியில்லை என்று தமிழக அரசு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் கூறப்பட்டது.

அரசு கூறுவது அரசியல் கட்சியின் உரிமைகளை பறிப்பது ஆகாதா? என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீவத்ஸவா கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் கூறிய அரசு வழக்கறிஞர்,  எந்தக் கட்சியும் பொதுக்கூட்டம் நடத்துவத்தில் இருந்து தடுக்கப்படுவதில்லை என விளக்கம் கொடுத்தது.

அப்போது குறுக்கிட்ட உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி,  எதன் அடிப்படையில் அப்படி ஒரு உத்தரவாதத்தை அளித்தீர்கள்? என்று  கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து, விதிகள் வகுக்கும் வரை, தமிழகத்தில் எந்தவொரு கட்சிகள் கூட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு வழக்கறிஞர் கூறினாரி.

மேலும், இதுதொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டு விட்டனவா என்றும் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் கூறிய அரசு வழக்கறிஞர், விதிகள் வகுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்டவர்களிடம் கலந்தாலோசனைகள் செய்து வருகிறோம் என்று தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து ஆஜரான தவெக வழக்கறிஞர்,  த வெகவின் கரூர் பிரசாரத்துக்கு ஒரு நாள் முன்புதான் காவல்துறையினால் அனுமதி வழங்கப்பட்டதாகவும், முன்கூட்டியே அனுமதி வழங்கியிருந்தால், இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் நடந்திருக்காது என்று தெரிவித்தார்.

இதையடுத்து பேசிய  தலைமை நீதிபதி, அனைத்துக் கட்சிகளுக்கும் முன்கூட்டியே அனுமதி வழங்க வேண்டும் அரசு வழக்கறிஞரிடம் வலியுறுத்தினார்.

மேலும், அரசியல் கட்சிகள், பொதுக்கூட்டங்கள் நடத்த எத்தனை நாள்களுக்கு முன்பு காவல்துறையிடம் அனுமதி பெற விண்ணப்பிக்க வேண்டும் என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

அப்போது, தவெக வழக்கறிஞர் குறுக்கிட்டு,  தமிழ்நாடு அரசு  சில கட்சிகளுக்கு அதிகக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. சில கட்சிகளுக்கு எந்தக் கட்டுப்பாடுகளும் விதிக்கப்படுவதில்லை, அரசு ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறது என்று குற்றம் சாட்டினார்.

இதனைக் கேட்ட நீதிபதி ஸ்ரீவத்ஸவா, இந்த வழக்கை மிகுந்த கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் கையாள்கிறோம் என்று கூறினார்.  மேலும், அரசியல் கட்சிகள் பேரணி மற்றும் பொதுக் கூட்டங்கள் நடத்த   வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்படாவிட்டால், நீதிமன்றமே உத்தரவு பிறப்பிக்க வேண்டியது வரும் என்றும் கூறினார். இதையடுத்து வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.