சென்னை:  ‘மோன்தா புயல்’ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்  என தமிழக பேரிடர் மீட்பு துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் கூறி உள்ளார். பருவமழைக்கு இதுவரை  31 பேர் பலியாகியுள்ளனர், 485 கால்நடைகள் உயிரிழந்துள்ளன , 20,000க்கும் மேற்பட்ட கோழிகள் இறந்துள்ளன. வடகிழக்கு பருவமழையால் இதுவரை 1,780 வீடுகள் சேதமடைந்து உள்ளது என்றும் தெரிவித்தார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. மேலும், தற்போது வங்கக்கடலில் உருவாகும் மோன்தா புயல் காரணமாக,  வரும் நாள்களில் கனமழைக்கு வாய்ப்பு  உள்ளது. இதன் காரணமாக சென்னை உள்பட மாநிலம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த  நிலையில் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்  சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் உயர் அதிகாரிகளுடன், மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, தமிழகத்தில் வட மாவட்டங்களில் மழை பெய்ய வாயப்புள்ளதால் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீர்வளத்துறை, வருவாய்த் துறை இணைந்து ஏரிகளின் நீர்மட்டத்தை கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும்   தெரிவித்தார்.

மோன்தா புயல்’ உருவாக வாய்ப்பு இருக்கும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும்,  ஆந்திராவை நோக்கி நகரும் ‘மோன்தா’ புயலின் தாக்கத்தால் சென்னை, வடக்கு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. அத்தியாவசிய பொருட்களை தயாராக இருப்பு வைக்க அதிகாரிகளை அறிவுறுத்தி இருக்கிறோம்.

 கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களை கரைக்கு திரும்ப அறிவுறுத்தி உள்ளோம். அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடும்போது கரையோர மக்களுக்கு எச்சரிக்கை கொடுத்து வருகிறோம். தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

நடப்பாண்டில் பருவமழை அதிகமாக பெய்யும் என எச்சரித்துள்ளதால் அதற்கேற்ப ஏற்பாடுகளை செய்துள்ளோம். தமிழகத்தில் அக். 1 முதல் 24ஆம் தேதி வரை 21.08 செ.மீ. மழை பெய்துள்ளது.

பருவமழைக்கு இதுவரை அதாவது,  அக். 25ஆம் தேதி வரை பெய்த மழைக்கு இதுவரை 31 பேர் பலியாகியுள்ளனர், 485 கால்நடைகள் உயிரிழந்துள்ளன , 20,000க்கும் மேற்பட்ட கோழிகள் இறந்துள்ளன. வடகிழக்கு பருவமழையால் இதுவரை 1,780 வீடுகள் சேதமடைந்துள்ளது என்றும் தெரிவித்தார்.

மேலும், பருவமழை காரணமாக நெற்பயிர்கள் பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.  கணக்கெடுப்பு முடிந்தவுடன் உரிய நிவாரணம் வழங்கப்படும்.

இவ்வாறு கூறினார்.