சென்னை: வளர்பிறை முகூர்த்தம், வார இறுதி விடுமுறைக்காக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் 24 25 26 அக்டோபர் 2025 அன்று முகூர்த்தம் மற்றும் வார இறுதிக்காக சென்னை உள்ளிட்ட பல நகரங்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவித்துள்ளது.

இதுகுறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,
24/10/2025 (வெள்ளிக்கிழமை) முகூர்த்தம், 25/10/2025 (சனிக்கிழமை), 26/10/2025 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய வார விடுமுறை நாட்களை முன்னிட்டு கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்புப் பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது.
சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 24/10/2025 (வெள்ளிக்கிழமை) அன்று 365 பேருந்துகள் மற்றும் 25/10/2025 (சனிக்கிழமை) அன்று 445 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூர் ஆகிய இடங்களுக்கு 24/10/2025 மற்றும் 25/10/2025 ஆகிய நாட்களுக்கு 120 பேருந்துகள், பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூரிலிருந்து பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்புப் பேருந்துகள், மாதாவரத்திலிருந்து 40 சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்பும் பயணிகளின் தேவையினைக் கருத்தில் கொண்டு அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.
வெள்ளிக்கிழமையன்று 9,164 பயணிகள், சனிக்கிழமையன்று 8,575 பயணிகள் மற்றும் ஞாயிற்றுக்கிழமையன்று 16,108 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்.
இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்பதால் தொலைதூரப் பயணம் மேற்கொள்ள இருப்பவர்கள் www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இச்சிறப்புப் பேருந்து இயக்கத்தை கண்காணிக்க அனைத்துப் பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.