சென்னை: மறைந்த நடிகை மனோரமாவின் மகன் பூபதி மற்றும் இசையமைப்பாளர் தேவா தம்பி சபேஷ் ஆகியோர் இன்று உடல்நலக்குறைவால் உயிரிழந்தனர்.

தமிழ்த் திரையுலகின் மறக்க முடியாத எவர்கிரீன் நடிகை மனோரமா. இவர் கடந்த 2015ம் ஆண்டில் உடல்நலக்குறைவால் காலமானார். இவரது ஒரே மகன் பூபதி (வயது 70), வயது முதிர்வு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில், இன்று காலை அவர் காலமானதாக தகவல் வெளியாகி உள்ளது.
மூச்சு திணறல் பிரச்னையால் அவதிப்பட்ட வந்த பூபதி, வீட்டில், தனது அம்மா மனோரமா பயன்படுத்திய கட்டிலிலேயே படுத்திருந்த நிலையில், இன்று காலை இவரது உயிர் பிரிந்தது. பூபதிக்கு ராஜராஜன் என மகனும், அபிராமி, மீனாட்சி என்ற மகள்களும் உள்ளனர். நாளை இறுதி சடங்கு நடக்கிறது.
நடிகர் பூபதி, ‘ நடிகர் விசுவின் ‘குடும்பம் ஒரு கதம்பம்’ படத்தில் அறிமுகமான பூபதி, அதன் பின்னர் சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தார். மகனுக்காக தூரத்து பச்சை என்ற படத்தையும் மனோரமா தயாரித்தார். ஆனால் எது எடுபடவில்லை. சீரியல்கள் சிலவற்றிலும் பூபதி நடித்தார். இவரை திரையுலகில் அறிமுகப்படுத்தி பிரபலமாக்க மனோரமா எடுத்த முயற்சிகள் தோல்வி அடைந்தன.
அதுபோல, மற்றொரு சோக சம்பவமும் நடைபெற்றுள்ளது. ‘தேனிசை தென்றல்’ தேவாவின் இளைய சகோதரருமான சபேஷ் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
தேவாவிடம் உதவி இசையமைப்பாளராக தனது திரை பயணத்தை துவங்கிய சபேஷ், மற்றொரு சகோதரர் முரளியுடன் இணைந்து பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். தனித்தும் இவர் சமுத்திரம், தவமாய் தவமிருந்து, மாயாண்டி குடும்பத்தார் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவரின் மகன் கார்த்திக் சபேஷ் திரைப்படங்களில் காமெடியனாக நடித்து வருகிறார். இவரின் சகோதரி மகன் தான் நடிகர் ஜெய் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரின் திடீர் மறைவிற்கு நடிகர்களும், இசை துறையில் இருப்பவர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.