சென்னை: நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தொகுதி திமுக எம்எல்ஏ.வான கு.பொன்னுசாமி (வயது 74) உடல்நலக் குறைவால் காலமானார். கு.பொன்னுசாமி மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். திமுக எம்.பி. கனிமொழியும் இரங்கல் தெரிவித்துள்ளார்.

திடீர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த பொன்னுசாமி சிகிச்சை பலனின்றி இன்று (அக்.23) காலை உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கு.பொன்னுசாமி மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “சேந்தமங்கலம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் கு.பொன்னுசாமி மறைந்த துயரச் செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். சேந்தமங்கலம் தொகுதி மக்களின் நன்மதிப்பை பெற்று இரண்டு முறை அவர்களது பிரதிநிதியாகச் சட்டமன்றத்தில் மக்கள் பணி ஆற்றிய அவரது மறைவு அத்தொகுதி மக்களுக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் பேரிழப்பாகும்.
கழகத்தின் மீது தீவிரப் பற்றும், முத்தமிழறிஞர் கலைஞர் மீதும், என் மீதும் பேரன்பும் கொண்டு செயலாற்றி வந்த அவர், நாமக்கல் கிழக்கு மாவட்டக் கழகத் துணைச் செயலாளராகக் கழகத்தை வளர்த்ததோடு, பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்காக அயராது பாடுபட்டவர்.
அவரது மறைவுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது பிரிவால் வாடும் சேந்தமங்கலம் தொகுதி மக்கள், அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், பொதுவாழ்வில் அவருக்குத் துணை நின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த உடன்பிறப்புகள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.”
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதுபோல, திமுக எம்பி கனிமொழி தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் இரங்கலை தெரிவித்துள்ளார். அதில், ” சேந்தமங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. பொன்னுசாமி அவர்கள் மறைவெய்திய செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தினர் மற்றும் கழகத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
