சென்னை: தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் அறுந்து கிடக்கும் மின்கம்பிகள் குறித்து பொதுமக்களுக்கு மின்வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளது.

மழைக்காலங்களில் மின்வாரியம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மின்கம்பங்கள், மின்மாற்றிகள், மின் பகிர்வுப் பெட்டிகள் மற்றும் மின் இணைப்புகளில் இருந்து விலகி இருக்க வேண்டும். மின்கம்பிகள் அறுந்து கிடந்தால், அதைத் தொடாமல் உடனடியாக மின்வாரிய அதிகாரிகளுக்குத் தெரிவிக்க வேண்டும். குழந்தைகள் மின்கம்பங்களுக்கு அருகில் விளையாடுவதைத் தடுக்க வேண்டும் என கூறி உள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதன் காரணமாக அக்டோபர் 15ந்தேதி முதல் மாநிலம் முழுவதும், மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது. மேலும், தற்போது அரபிக்கடல் மற்றும், வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால், பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, பொதுமக்கள் வெளியே செல்லும்போது, சாலைகளில் அறுந்து கிடக்கும் மின்கம்பிகள் அருகில் செல்ல வேண்டாம் என மக்களை மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
மழைக் காலங்களில் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து மின்வாரியம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,
ஈரமான கைகளால் மின்சுவிட்சுகள், மின்சாதனங்களை இயக்க முயற்சிக்க வேண்டாம்,
வீட்டின் உள்புறசுவர் ஈரமாக இருந்தால் சுவிட்சுகள் எதையும் இயக்கக் கூடாது, ஈரப்பதமான சுவர்களில் கை வைக்க கூடாது.
நீரில் நனைந்த அல்லது ஈரப்பதமான மின்விசிறி, லைட் உட்பட எதையும் மின்சாரம் வந்தவுடன் இயக்க வேண்டாம்,
மின்கம்பங்கள், மின்மாற்றிகள் மற்றும் மின் பகிர்வுப் பெட்டிகளுக்கு அருகில் செல்ல வேண்டாம்.
அறுந்து கிடக்கும் மின்கம்பிகளைத் தொடாதீர்கள்.
மின்சாரத்தால் ஆபத்து ஏற்படும் என சந்தேகிக்கப்படும் இடங்களை உடனடியாக மின்வாரியத்திற்குத் தெரிவிக்கவும்.
கனமழை மற்றும் புயலின் போது மின்சார உபகரணங்களை கவனமாகக் கையாளவும்.
வீட்டிற்குள், மின் சாதனங்களை மழை நீர் படும் வகையில் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
குழந்தைகள் மின் கம்பங்களுக்கு அருகில் விளையாட அனுமதிக்காதீர்கள்.
மின்கம்பிகள் அறுந்து கிடக்கும் பகுதிகள், மின்சார கேபிள்கள், மின்சார கம்பங்கள், பில்லர் பாக்ஸ் மற்றும் டிரான்ஸ்பார்மர்கள் இருக்கும் பகுதிகளுக்கு அருகில் செல்வது தவிர்க்க வேண்டும்.
சாலைகளிலும், தெருக்களிலும் மின்கம்பங்கள் மற்றும் மின்சாதனங்களுக்கருகே தேங்கிக்கிடக்கும் தண்ணீரில் நடப்பேதா, ஓடுவேதா, விளையாடுவதோ மற்றும் வாகனத்தில் செல்வேதா தவிர்க்கப்பட வேண்டும்.
மின்சேவை, மின்கம்பி அறுந்துவிழுதல், மின்தடை குறித்த புகார்களுக்கு உடனடியாக மின்னகத்தை “94987 94987” தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இவ்வாறு கூறியுள்ளது.